கர்நாடகா மாம்பழத்துக்கு ஆந்திராவில் தடை.. இருமாநிலங்கள் இடையே வெடித்த பிரச்சனை.. என்ன காரணம்?
பெங்களூர்: கர்நாடகாவில் விளையும் ‛தோத்தாபுரி' மாம்பழத்துக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவின் காரணமாக இருமாநிலங்கள் இடையே மாம்பழ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த தடை ஏன்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கர்நாடகாவும், ஆந்திராவும் அண்டை மாநிலங்களாக உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் கர்நாடகா - ஆந்திரா இடையே மாம்பழ சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவு தான் காரணமாகும்.
கடந்த 7 ம் தேதி சித்தூர் கலெக்டர், கர்நாடகாவில் இருந்து தோத்தாபுரி மாம்பழங்கள் இறக்குமதி செய்ய தடை விதித்தார். இதற்கு முக்கிய காரணம் கடந்த ஆண்டு ஆந்திராவில் தோத்தாபுரி மாம்பழம் டன்னுக்கு ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால் இப்போது அதன் விலை ரூ.12 ஆயிரமாக சரிந்துள்ளது. லோக்கல் மார்க்கெட்டி்ல ஒரு கிலோ ரூ.5-6க்கு மட்டுமே விற்பனையாகிறது.
இதனால் தோத்தாபுரி மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவானது. இதையடுத்து ஆந்திர அரசு தோத்தாபுரி மாம்பழம் ஒரு கிலோ ரூ.8 என கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தது. மேலும் ரூ.4 மானியமாக அறிவித்தது. இதன்மூலம் ஒரு கிலோ மாம்பழத்துக்கு ரூ.12 வரை விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால் தற்போது தோத்தாபுரி மாம்பழம் கர்நாடகாவில் இருந்து அதிகமாக வருவதால் இது ஆந்திர விவசாயிகளை பாதிக்கும் வகையில் உள்ளது. இதையடுத்து சித்தூர் மாவட்ட கலெக்டர் இந்த தடை உத்தரவை பிறப்பித்தார்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் என்பது கர்நாடகா, தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது. சித்தூர் மாவட்டத்துக்குள் கர்நாடகாவின் ‛தோத்தாபுரி' மாம்பழத்தை தடை செய்வது என்பது மொத்த ஆந்திர மாநிலத்துக்கான சப்ளையை பாதிக்கும். இதனால் கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் மாம்பழ விவசாயிகள் அதிகம் உள்ளனர். இங்கு தோத்தாபுரி மாம்பழம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் லாபமடைந்தனர். ஆனால் கர்நாடகாவில் இருந்து தோத்தாபுரி மாம்பழகம் என்பது ஆந்திராவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதையடுத்து விலை சரிவடைந்தது. ஒரு கிலோ ரூ.5க்கு மட்டுமே விற்பனையானது. இதனால் ஆந்திர விவசாயிகள் கடும் கோபமடைந்தனர்.
இதையடுத்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழதினார். அதில், ‛‛கர்நாடகா மாம்பழத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்த தடையால் கர்நாடகா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்ததடை என்பது இருமாநிலங்கள் இடையேயான வர்த்தகத்தை பாதிக்கும். எனவே தடையை நீக்க ஆந்திர அரசு பரிசீலனை செய்ய வேண்டும் '' என்று கூறியிருந்தார்.
அதேபோல் கர்நாடகா தலைமை செயலாளர் ஷாலினி ரஜ்னிஷ், ஆந்திராவின் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‛‛கர்நாடகா மாம்பழத்துக்கு விதிக்கப்பட்ட தடை என்பது ஒருதலை பட்சமானது. இது பிரச்சனையை தூண்ட வழிவகுக்கும். எனவே தடையை திரும்ப பெற வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் இந்த தடை உத்தரவு பற்றி ஆந்திர அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றி ஆந்திர அரசு, ‛‛கர்நாடகா உள்பட பிற மாநிலங்களில் இருந்து தோத்தாபுரி மாம்பழம் கொள்முதல் செய்வதால் மாநிலத்தில் உள்ள மாம்பழ விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய வருமானம் கிடைப்பது இல்லை. மாம்பழத்தின் விலை குறைகிறது.
இதனால் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதை தடுக்கவே கர்நாடகாவில் இருந்து மாம்பழ கொள்முதல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இந்த ஆண்டு 5.5 லட்சம் டன் அளவுக்கு மாம்பழம் அறுவடை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிற மாநிலங்களில் இருந்து மாம்பழம் வராவிட்டால் தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகா மாம்பழத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று ஆந்திர அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் இருமாநிலங்கள் இடையே மாம்பழ சண்டை வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications