மீண்டும் "மாஸ்க்" கட்டாயம்! அதிகரிக்கும் கொரோனா அச்சம்.. கர்நாடகா எடுத்த அதிரடி முடிவு
பெங்களூர்: உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இது குறித்த அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக மாஸ்க் கட்டாயம் என்ற அறிவிப்பைக் கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் வெளியிட்டுள்ளார்.
சீனாவில் இத்தனை காலம் ஜீரோ கோவிட் கட்டுப்பாடுகளே அமலில் இருந்தது. இதற்கு அங்கு மக்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் ஊரடங்கை அந்நாட்டு அரசு வேறு வழியின்றி நீக்கியது.
இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதில் இருந்தே அங்கு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் எங்கு உலகெங்கும் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா
மேலும், அங்கு புதிய உருமாறிய கொரோனா பாதிப்பும் உறுதியாகியுள்ள நிலையில், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய இந்தியாவிலும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க மத்திய அரசு இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் வல்லுநர்களின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நமது அண்டை மாநிலமான அம்மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. அம்மாநில முதல்வர் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனா அச்சம் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில அரசு மாஸ்க் அணிவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாஸ்க்
இதற்கிடையே ஏசி ஹால், உள்ளரங்கு நிகழ்வுகளில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சுகாதார அமைச்சர் சுதாகர் வெளியிட்டுள்ளார். மேலும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் 3% பேருக்கு விமான நிலையத்தில் ரேண்டம் சோதனை செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்போது கர்நாடகாவில் தினசரி 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் அந்த எண்ணிக்கையை வரும் காலத்தில் அதிகரிக்க உள்ளதாகவும் அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

சோதனை
இது குறித்து அமைச்சர் சுதாகர் மேலும் கூறுகையில், "உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விரிவான டேட்டாக்கள் கிடைத்த உடன், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் கூடிய விரைவில் பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும். அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இப்போது சுமார் 20% பேர் மட்டும் பூஸ்டர் டோஸ் எடுத்துள்ளனர். அனைவரும் தாமதிக்காமல் விரைவில் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூஸ்டர் டோஸ்
நீங்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைப் பெற்றால் எந்த ஆபத்தும் இல்லை. கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்வதால் எந்தவொரு மோசமான பக்க விளைவுகளும் ஏற்படாது. அடுத்து புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வருகிறது. இந்த கொண்டாடங்களுக்கு பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றாக கூட வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பாகவும் தெளிவான வழிகாட்டுதல்களை மிக விரைவில் வெளியிடுவோம். முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் இந்த வழிகாட்டுதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாஸ்க் அணிய வேண்டும்
உள்ளரங்குகளில் நிச்சயம் மாஸ்க் அணிய வேண்டும். இந்த முடிவும் முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறித்த யாரும் எதுவும் பேசவில்லை. இப்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது இதனால் நாம் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.. கொரோனா அச்சம் இருக்கும் நிலையில், அது குறித்து கவலைப்படாமல் ராகுல் காந்தி ஒற்றுமை பாத யாத்திரை சென்று வருகிறார்" என்றும் சாடினார்.












Click it and Unblock the Notifications