பெங்களூரில் சோகத்தில் முடிந்த பப் பார்ட்டி.. ஐடி பெண் ஊழியர், ஆண் நண்பர் பரிதாப பலி
பெங்களூர்: ஐடி தலைநகரான பெங்களூரின் மத்திய பகுதியிலுள்ள ஒரு பப்பில் கீழே தவறி விழுந்து இரு இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் அ்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி தலைநகரமான பெங்களூர், மதுபான பப்களுக்கும் பெயர் பெற்றது. அதிலும் மத்திய பெங்களூரின் முக்கியமான கமர்ஷியல் ஏரியாவான எம்ஜிரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பப் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றவை.

இந்த நிலையில், எம்ஜிரோடு பகுதியிலுள்ள சர்ச் ஸ்ட்ரீட்டிலுள்ள ஒரு பப்பில் நேற்று நள்ளிரவு விபரீத சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின், மூன்றாவது மாடியில், அபிஷேக் என்பவருக்கு சொந்தமான BEiR என்ற பப் இயங்கி வருகிறது. நேற்று இரவு சுமார் 11.30 மணிக்கு, பப்பில் இருந்து 2வது தளத்திற்கு, பவன் அட்டாவர் (36) என்பவரும், அவரது தோழி வேதா என்பவரும் பார்ட்டியை முடித்துக் கொண்டு, நடந்து வந்துள்ளனர்.
அப்போது, 2வது தளத்தின் போர்ட்டிகோ பகுதியில் பெரிய இடைவெளி இருந்துள்ளது. இது தெரியாமல் ஒருவர் பின் ஒருவராக பவன் மற்றும் வேதா இருவரும் வழுக்கி சரிந்தனர். இதனால், நேராக தரைத் தளத்தில் சென்று விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேதா அதே இடத்தில் பலியானார். பவுரிங் மருத்துவனையில், சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட, பவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதில் பவன், பப்ளிகேஷன் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர். வேதா ஒரு ஐடி துறை ஊழியர். இதனிடையே கப்பன் பார்க் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அபிஷேக் மற்றும் பப் மேலாளர் மனி ஆகியோருக்கு எதிராக 304A பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்தால் தண்டனை கொடுக்க வகை செய்யும் சட்டப் பிரிவு இதுவாகும்.












Click it and Unblock the Notifications