நகர்ப்புற நீர் மேலாண்மையில் சிறந்த செயல்பாடு:பெங்களூர் குடிநீர் வாரியத்திற்கு 'உலக நீர் 2025’ விருது
பெங்களூர்: நகர்ப்புற நீர் மேலாண்மையில் சிறந்த செயல்பாடுக்காக பெங்களூர் குடிநீர் வாரியத்திற்கு 'உலக நீர் 2025 'விருது வழங்கப்பட்டுள்ளது. பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் இது மிக வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. யுனெஸ்கோவுடன் இணைந்து The Water Digest இந்த விருதை வழங்கியுள்ளது. நீர் மேலாண்மையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பெங்களூர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு BWSSB சேர்மன் ராம் பிரசாத் மனோகர் ஐ.ஏ.எஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக பெங்களூர் உள்ளது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் கோடிக்கணக்காண மக்கள் வசித்து வருகிறார்கள். பெங்களூர் நகரில் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பொறுப்பை பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியமான BWSSB செயல்படுத்தி வருகிறது.

உலக நீர் 2025 விருது
பெங்களூர் மாநகராட்சியில் நீர் மேலாண்மையில் சிறந்து வழங்கும் பெங்களூர் குடிநீர் வாரியம் மக்களுக்கு தூய்மையான தண்ணீர் விநியோகம் செய்வதில் பல நகரங்களுக்கும் முன்னோடியாக விளங்குகிறது. எனவே பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரியம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது. இதை நிரூபிக்கும் விதமாகத்தான் பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நிலையான நகர்ப்புற நீர் மேலாண்மைக்காக "உலக நீர் 2025" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் குடிநீர் வரிகால் வாரியத்தில் இது மிக வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. யுனெஸ்கோவுடன் இணைந்து The Water Digest இந்த விருதை வழங்கியுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தண்ணீர் மறு பயன்பாடு, பாதுகாப்பு, நீர் சுத்திகரிப்பு, ஆகியவற்றில் சிறந்து வழங்கும் அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோர்களின் முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
கிரீன் ஸ்டார் சவால் திட்டம்

இத்தகைய சிறப்பு மிக்க விருதைத்தான் பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியம் பெற்றுள்ளது. பெங்களூரில் தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகளுக்காக இந்த கவுரவம் கிடைத்துள்ளது. அதாவது, அன் அக்கவுண்டடு என்று சொல்லப்படும் கணக்கிற்குள் வராத தண்ணீர் அளவு விகிதத்தை 28 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைத்தல்; கிரீன் ஸ்டார் சவால் என்ற திட்டம் மூலம் நீர் பாதுகாப்பை ஊக்குவித்தல்.
தண்ணீர் செயல் திறனை மேம்படுத்த aerators பயன்படுத்துவதை கட்டாயம் ஆக்குதல்; நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த 23 ஏரிகளை சுத்திகரிக்கப்பட்ட நீரால் நிரப்புதல்: குடிசைப் பகுதிகளுக்கு மின் டேங்கர் லாரிகள் மூலம் இலவச குடிநீர் விநியோகம்; ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் ஜீரோ பாக்ட்ரியா தண்ணீரை வழங்குதல்: சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிநீர் அல்லாத பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை மேம்படுத்துதல். நகரம் முழுவதும் 10 லட்சம் aerators நிறுவுதல்: 3,000 மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருது கிடைத்துள்ளது.
விருதுகள்
* பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கனவே, CII IGBC பசுமை திட்டம் 2024 விருது
* இந்திய தரநிலைகள் பணியகமான பிஐஎஸ் -இடம் இருந்து முதல் சான்றிதழ்
* பெங்களூருவின் நீர் மேலாண்மை மாதிரிக்கு ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் அங்கீகாரம்
* STP தர செயல்திறனுக்காக மத்திய அரசிடம் இருந்து கிடைத்த பாராட்டு
* வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக திட்டமான ஜல் ஹி அம்ரித் நடத்திய போட்டியில் ₹100 கோடி பரிசு ஆகிய சிறப்புகளை BWSSB-பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ் பாராட்டு
பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கிடைத்த இந்த விருது தொடர்பாக BWSSB சேர்மன் ராம் பிரசாத் மனோகர் கூறுகையில், "கர்நடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைக்கு ஒரு சான்றாகும். நீடித்த நீர் மேலாண்மையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பெங்களூர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு மனப்பூர்வ பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது கிடைத்து இருக்க கூடிய அங்கீகாரம், பெங்களூரின் எதிர்கால நீர் பாதுகாப்பு பணிக்கு எங்கள் முயற்சிகளைத் தொடர மேலும் ஊக்குவிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications