திடீர் மர்ம சத்தம்.. சுழன்றடித்து சுருட்டி வீசிய சூறாவளி.. என்னதான் நடக்கிறது பெங்களூரில்?
பெங்களூர்: ஒருநாள் திடீரென பயங்கர சத்தம் எதிரொலிக்கிறது.. இன்னொருநாள் சூறாவளி காற்று திடீரென சுழன்று அடிக்கிறது.. என்னதான் நடக்கிறது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் பெங்களூர்வாசிகள்.
Recommended Video
கடந்த புதன்கிழமை மதியம் இப்படித்தான் திடீரென வானிலிருந்து ஒரு பெரிய சத்தம் நகரம் முழுக்க எதிரொலித்தது. அணுகுண்டு விழுந்து விட்டதா என்று மக்கள் பயப்படும் அளவுக்கு அந்த சப்தம் இருந்தது.
பலரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஒசூர் வரை அந்த சத்தம் கேட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையின்போது எதுவுமே தெரியாத நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சகம் இரவு அளித்த விளக்கம் மக்களை நிம்மதி அடையச் செய்தது.

போர் விமானம்
அதாவது வானில் தங்களது போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அது வேகத்தை குறைக்கும் போது எழுந்த ஒலி தான் அது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்பாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரென பெங்களூரில் பலத்த சூறைக்காற்று வீசியது. அம்பன் புயல் மேற்கு வங்க மாநிலத்தில் கரையை கடந்து விட்ட நிலையில், பெங்களூரில் எதற்காக 'புயல்' வீசுகிறது என்று பலரும் தெரியாமல் விழித்தனர்.

ஜன்னல்கள்
திறந்துவைத்த வீட்டு ஜன்னல்கள் டப, டப என்று அடிக்க தொடங்கின. வீட்டுக்குள் இருந்த அனைவரும் ஓடிச்சென்று, கதவு, ஜன்னல்களை பூட்டினர். இப்படியான ஒரு பெரும் காற்று, பிறகு மழை வெளுத்து வாங்கியது. இத்தனைக்கும் இந்த மழை குறித்து வானிலை ஆய்வு மையம் எந்த முன் அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.

30 மரங்கள் வேரோடு சாய்ந்தன
வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென இப்படி ஒரு காலநிலை மாற்றம் ஏற்பட்டதை நகர மக்கள் பரபரப்புடன் பார்த்தனர். இந்த காற்று மழை காரணமாக பெங்களூர் நகரில் சுமார் 30க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. பல இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றுள்ளது.

பலத்த மழை
நேற்று மாலை நிலவரப்படி 34 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. தெற்கு பெங்களூரின் சில பகுதிகளில் இரவும் மழை பெய்தது என்பது வேறு விஷயம். குறிப்பாக, தெற்கு பகுதி அதிகமான மழைப்பொழிவு பெற்றுள்ளது. பொம்மனஹள்ளி, பிடிஎம் லேஅவுட், கோரமங்களா, ஜேபி நகர் போன்ற பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருந்ததாக மாநகராட்சி தெரிவிக்கிறது. சுமார் 8 வீடுகளில் கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த சம்பவமும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications