பெங்களூரில் நடிகை ரன்யா ராவ் கைது! துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தல்!
பெங்களூர்: துபாயில் இருந்து 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் தமிழில் வாகா எனும் படத்தில் நடித்திருந்தார்.
கர்நாடகா மாநிலம் சிக்மக்ளூரை சேர்ந்தவர் ரன்யா ராவ் (32). இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரமுடன் வாகா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தார். அவர் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்.
இதனால் சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள், அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது 25 தங்கக் கட்டிகள் இருந்தன. இவை 14.8 கிலோ எடை கொண்டவை ஆகும். இதையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

தான் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்றும் பெங்களூர் மாநகர போலீஸார் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் ரன்யா தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது நிகழ்த்தப்பட்ட விசாரணையில் ரன்யா ராவ், கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய்க்கு சென்று திரும்பியது தெரியவந்தது. ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தி வந்ததாகவும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ரன்யா ராவ் மீது வழக்குப் பதிவு செய்து அவரிடம் இருந்த 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரை நேற்றைய தினம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கின் பின்னணியில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications