“சென்சிட்டிவ்”.. குண்டு வெடிப்பு பற்றி கற்பனை கதை சொல்லாதீங்க! வேலை செய்ய விடுங்க - பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கற்பனை கதைகளை பகிர வேண்டாம் எனவும், போலீஸ் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறும் பெங்களூர் காவல் ஆணையர் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் ஒயிட்பீல்டை அடுத்த குந்தலஹள்ளி பகுதியில் அமைந்து உள்ளது ராமேஸ்வரம் கபே உணவகம். தென் இந்தியாவின் பல்வேறு இடங்களில் கிளை பரப்பி இருக்கும் இந்த உணவகம் பெங்களூரில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகவும், எப்போது மக்கள் கூட்டத்துடன் இருக்கும் தலமாகவும் காணப்படும். வேலைக்கு செல்பவர்கள், தொழில் செய்பவர்கள் பசியாறவும், சற்று இளைப்பாறவும் இந்த உணவகத்திற்கு வந்து மனதார சாப்பிட்டு செல்வார்கள்.

இப்படி அமைதியை நாடி வருபவர்களின் அமைதியை கெடுக்கும் வகையிலான கோர சம்பவம் இந்த உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறி இருக்கிறது. மதிய உணவு சாப்பிட கூட்டம் அலைமோதும் 1 மணியளவில் அந்த கோடூரம் நடந்து. உணவகத்தில் சுமார் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது வந்த அதி பயங்கர சத்தம் அங்கிருந்தவர்களை திடுக்கிட வைத்தது.
சில வினாடிகளில் உணவகம் முழுவதும் புகை சூழ்ந்தது. ஹோட்டல் கண்ணாடிகள், தரையில் இருந்த கற்கள் நொறுங்கின. பரபரப்பில் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உணவுப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு பதறியடித்து வெளியே ஓடினார்கள் வாடிக்கையாளர்கள் உணவக ஊழியர்கள். தொடக்கத்தில் சிலிண்டர் வெடித்ததாக அவர் நினைத்த நிலையில் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது அறிந்து அனைவரும் அதிர்ந்தனர்.
இந்த தாக்குதலில் பெண் மற்றும் உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் உணவகத்தின் கை கழுவும் இடத்தில் குண்டுகள் வெடித்து சிதறியது உறுதியானது. அங்கிருந்த பையில் ஒன்றில் இரும்பு போல்டு, அடையாள அட்டை, பேட்டரி போன்றவை இருந்தன. மோப்ப நாய்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றுடன் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை இந்த தாக்குதலும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கான நோக்கம் என்ன? யார் இதை செய்தது? என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தையும் இதையும் தொடர்புபடுத்த வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார். ஆனால், சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இது தொடர்பாக பல்வேறு கணிப்புகளும், வதந்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ள பெங்களூர் காவல் ஆணையர், "ராமேஸ்வரம் கபே சம்பவம் தொடர்பாக விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கின் தீவிரத் தன்மை கருதி பாதுகாப்பு நோக்கங்களை மனதில் கொண்டு ஊடகங்கள் தங்களின் கணிப்புகளை வெளியிடாமல் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், "விசாரணை பெங்களூரு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீண்டு வருகிறார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை." என்று தெரிவித்தார். இந்த நிலையில் இன்று காலை பெங்களூரில் காவல் ஆணையர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஊடக நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறோம். கணிப்புகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். விசாரணை தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டாம். விசாரணை நிறுவனங்கள் தொழில் முறையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications