பெங்களூரில் வருடத்துக்கு 86,000 டன் கம்ப்யூட்டர், செல்போன்கள் தெருவில் விழுகிறது: ஆய்வில் தகவல்
பெங்களூர்: பெங்களூரில் ஆண்டுக்கு சுமார் 86 ஆயிரத்து 118 டன் இ-குப்பைகள் குவிவதாக கர்நாடக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கொள்கை வகுப்பு இன்ஸ்ட்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்று அழைக்கப்படுவது பெங்களூர். அதிகப்படியான ஐடி நிறுவனங்கள் இந்த நகரில் குவிந்துள்ளதால் நவீன தகவல் தொடர்பு சாதனைகளை இங்குள்ள மக்கள் அதிக அளவுக்கு பயன்படுத்துகிறார்கள்.
இவைதான் இ-வேஸ்ட்
கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன்கள், ஒலி பெருக்கிகள், மைக்ரோவேவ் ஓவன்கள், ஃபிரிட்ஜ்கள் கழிவாக தூக்கி எறியப்படும்போது அவை எலக்ட்ரானிக் குப்பைகள், அல்லது சுருக்கமாக இ-வேஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.
86,118 டன் குப்பை குவிகிறது
அந்த வகையில் பெங்களூரில் ஆண்டுக்கு சராசரியாக 86 ஆயிரத்து 118 டன் இ-குப்பைகள் குவிகின்றனவாம். கர்நாடக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கொள்கை வகுப்பு இன்ஸ்ட்டிடியூட் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
மானிட்டர், கீபோர்டு, செல்போன் அதிகம்
குப்பைகளில் பெரும்பாலானவை கம்ப்யூட்டர் மானிட்டர்கள், கீபோர்டுகள், செல்போன்கள் ஆகியவையாகும். இவற்றை மறு சுழற்சிக்கு உட்படுத்தினால் அவை மண்ணில் மட்காமல் தப்பிக்கும். இதனால் மணலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது.
34 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்
பெங்களூரை பொறுத்தளவில் மறுசுழற்சி செய்ய முறையாக அனுமதி பெற்ற நிறுவனங்கள் வெறும் 34 மட்டுமே. அதிலும், 14 நிறுவனங்கள் மட்டுமே, ஆண்டு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளன. அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களால் மொத்த குப்பையில் 10 சதவீதத்தை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடிகிறது.
அங்கீகாரம் இல்லா நிறுவனங்கள்
பெரும்பாலான குப்பைகள், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதுபோன்ற நிறுவனங்கள் குப்பைகளுக்கு அதிக விலை கொடுப்பதால் குப்பை சேகரிப்பாளர்கள், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடமே குப்பைகளை அளிக்கின்றனர். இவர்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மதித்து மறுசுழற்சி செய்யாததால் சுற்றுச்சூழல் மாசடைவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.