பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு இனி Work From Home? கனமழையால் நிறுவனங்களுக்கு எம்பி அனுப்பிய மெசேஜ்
பெங்களூர்: பெங்களூரில் பல இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஓசூர் ரோட்டில் பல இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் இன்போசிஸ் உள்பட ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும் என்பது பெங்களூர் மத்திய தொகுதியின் பாஜக எம்பி பிசி மோகன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும். கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் மழை பெய்யவில்லை. இதனால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டது. பொதுமக்கள் டேங்கர்களில் வரும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தினர்.

அதுமட்டுமின்றி ஐடி ஊழியர்களுக்கு ‛வொர்க் ஃப்ரம் ஹோம்' வாய்ப்பு என்பது வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. தற்போது பெங்களூரில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விட்டு விட்டு பெங்களூரில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெங்களூர் விமான நிலையத்தில் அதிகபட்சமாக 105.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுதவிர இன்று முதல் வரும் 23ம் தேதி வரை பெங்களூரில் ‛மஞ்சள் அலர்ட்' என்பது வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக 24 மணிநேரத்தில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் முதல் அதிகபட்சமாக 5.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஒரு பகுதிக்கு ‛மஞ்சள் அலர்ட்' விடுக்கப்படும். அந்த வகையில் பெங்களூருக்கு வரும் 23ம் தேதி வரை ‛மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்த மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும்போது சாலைகள் மற்றும் குடியிருப்புகளை மழைநீர் சூழலாம். அதன்படி பெங்களூரில் நேற்று முதல் இன்று வரை விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக அதிகாலை வேளைகளில் கனமழை பெய்து வருகிறது. மடிவாளா, எலக்ட்ரானிக் சிட்டி, ரூபேன அக்ரஹாரா, சில்க்போர்டு உள்பட பல இடங்களில் இன்று அதிகாலை கனமழை பெய்தது.
இதனால் ஓசூர் ரோட்டில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஓசூர் ரோட்டில் சில்க் போர்டு முதல் ரூபேன அக்ரஹாரா வரை வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை சுற்றி இன்போசிஸ் உள்பட பல்வேறு முக்கிய ஐடி நிறுவனங்கள், பிற துறைகள் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் நேற்று, இன்று பணிக்கு செல்லும் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் பெங்களூர் மத்திய நாடாளுமன்ற தொகுதியின் எம்பியான பிசி மோகன் இன்போசிஸ் உள்பட பிற நிறுவனங்களுக்கு இன்று முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இன்போசிஸ் உள்பட பிற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு ‛வொர்க் ஃப்ரம் ஹோம்' பணியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்னும் 3 நாட்கள் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதால் இந்த கோரிக்கையை பிசி மோகன் எம்பி வைத்துள்ளார். இதனால் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications