பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு.. விசாரணையை கையில் எடுத்த மத்திய அரசு.. என்ஐஏவிடம் ஒப்படைப்பு
பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடிப்பு நடந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ கையில் எடுத்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் ஃபீல்டு கிளை 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கமான பரபரப்புடன் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து வெடிகுண்டு வெடித்தது. ஹோட்டலில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சிதறின. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூர் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சிகள்: இந்த சம்பவம் குறித்து பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குண்டுவெடிப்பு நடந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுவது போல உணவையும் ஆர்டர் செய்து விட்டு கைகழுவும் பகுதியில் பையை விட்டு சென்ற நபரை போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
ஹோட்டல் அருகே உள்ள பேருந்துநிலையத்தில் இருந்து இறங்கி ஹோட்டலுக்கு பையுடன் வருவதும் போகும் போது வெறுங்கையுடன் செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவு சிக்கியுள்ளது. இவற்றை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். பேருந்துகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு சந்தேக நபர் இருக்கும் இடத்தை கண்டறிய போலீசார் கடந்த 3 தினங்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
என்ஐஏ விசாரணை:சந்தேக நபர் தமிழ்நாடு, கேரளா, மகராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் சென்று பதுங்கியிருக்க லாம் என கருதுவதால் எல்லையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்றுவருகிறது. குற்றவாளி குறித்த முக்கிய துப்பு துலங்கிவிட்டதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கர்நாடக அரசு கூறியது.
மேலும், குண்டு வெடிப்பு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏவிடம் இணைந்து விசாரணை நடப்பதாகவும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாகவும் கர்நாடக அரசு கூறியது. இந்த நிலையில், பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ கையில் எடுத்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications