பெங்களூர்: வருமான வரித்துறையினர் நெருக்கடி! அலுவலக கட்டிடத்திலிருந்து குதித்த ரியல் எஸ்டேட் நிறுவனர்
பெங்களூர்: பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான கான்ஃபிடன்ட் குரூப் தலைவர் சி.ஜே.ராய், பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திக்கொண்டிருந்த போதே, ராய் தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்.
இன்று மதியம் ராய் லேங்ஃபோர்ட் சாலை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு மேற்கொண்டிருந்தனர். அதிகாரிகள் மதிய உணவு இடைவேளையில் இருந்தபோது அல்லது சோதனையின் ஒரு பகுதியாக ஆவணங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, சி.ஜே. ராய் தனது அறைக்குள் சென்று இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
பெங்களூருவைத் மையமாக கொண்டு கேரளா, துபாய் உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களைக் கட்டி முடித்த ரியல் எஸ்டேட் ஜாம்பவான் இவர். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். அம்மாநில முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களுக்கு இவரது நிறுவனம் நீண்ட காலம் ஸ்பான்சராக இருந்துள்ளது.
மலையாளத் திரையுலகில் பல படங்களைத் தயாரித்தும், விநியோகம் செய்தும் ஒரு முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தார். இருப்பினும், கடந்த சில நாட்களாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த அதிரடி சோதனைகள் அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இவர் சமீபத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்.
ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வந்த சுணக்கம் அல்லது நிதி சார்ந்த சிக்கல்கள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது. பெங்களூரு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கும்போது முறையாக விதிமுறைகளைப் பின்பற்றினார்களா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications