கேள்விகளால் துருவி எடுத்த போலீசார்.. கணவர் சுபாஷ் தற்கொலையில்.. வழக்கறிஞர் பல்டி.. சிக்கிய மனைவி
சென்னை: அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் அவரின் மனைவி நிகிதா சிங்கானியா கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த நிலையில் நிகிதாவின் முதல் வழக்கறிஞர்.. இப்போது நிகிதாவிற்கு எதிராகவே கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.
அந்த வழக்கறிஞர் வெளியிட்டுள்ள கருத்தில்.. நிகிதா கொடுமைக்கு உள்ளாக்கவில்லை. அவர் தனது கணவரால் துன்புறுத்தப்பட்டதாக பொய்யாகவே கூறினார். கணவரை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்று மோசமாக நடந்து கொண்டார். முடிந்த அளவு பொய் வழக்குகளை பதிவு செய்ய திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

எப்படியாவது கணவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு பொய்யான வழக்குகளை பதிவு செய்து வந்தார். அவர் தனிப்பட்ட வகையில் கணவர் மூலம் கொடுமைகளை அனுபவித்ததாக பேட்டிகளில் கூறினார். ஆனால் அது எதிலும் உண்மை இல்லை. அப்படி எதுவுமே நடக்கவில்லை. வெறுமனே எப்படி எல்லாம் வழக்கு பதிவு செய்தால் அதிக அளவில் பணம் பெறலாம்.. எப்படி எல்லாம் வழக்கில் பாயிண்டுகளை சேர்த்தால் அதிக ஜீவனாம்சம் கிடைக்கும் என்றுதான் நிகிதா செயல்பட்டார், என்று நிகிதாவின் முதல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் கைதான அவரின் மனைவி நிகிதா சிங்கானியாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் போலீசாரிடம் நிகிதா சிங்கானியா முக்கியமான சில விஷயங்களை வாக்குமூலமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நான் அதுல் சுபாஷை துன்புறுத்தியதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. சுபாஷ்தான் என்னை கொடுமைப்படுத்தினார். என்னை தினமும் தொல்லை செய்தார். எனக்கு முக்கியமாக.. வரதட்சணை கொடுமை கொடுத்தார். என் அப்பா மரணத்திற்கு வரதட்சணை கொடுமைதான் காரணம்.
சுபாஷ் கேட்ட வரதட்சணை காரணமாக அதிர்ச்சி அடைந்த என் அப்பா.. மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். வரதட்சணை தந்தால் ஒன்றாக இருக்கலாம் இல்லை என்றால் முடியாது என்று சுபாஷ் கூறியதால் அதிர்ச்சி அடைந்த என் அப்பா மாரடைப்பு ஏற்பட்ட பலியானார்.
நான் எனது முன்னாள் கணவர் அதுலிடமிருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறேன். பணத்துக்காக அவரை துன்புறுத்தியிருந்தால் நான் ஏன் அவரை பிரிந்து இருந்திருக்க வேண்டும். அவருடனே இருந்திருப்பேன் அல்லவா? சுபாஷ் வைத்த குற்றச்சாட்டுகள் மிக மிக தவறானது.
இந்த வழக்கில் நிகிதா சிங்கானியா (29), அவரது தாயார் நிஷா சிங்கானியா, இளைய சகோதரர் அனுராக் சிங்கானியா (27) ஆகியோர் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிகிதா சிங்கானியாவின் மாமா சுஷில் சிங்கானியாவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பின்னணி: பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷ் சமீபத்தில் மனைவி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதுல் சுபாஷுக்கு கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. மனைவி, மாமியார், ஆண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள் மற்றும் சிஸ்டம் காரணமாக திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
அவர் தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி 24 பக்க குறிப்பு மற்றும் 90 நிமிட வீடியோவை விட்டுச் சென்றார்.
அவரின் தற்கொலை சம்பவம் நாடு முழுக்க சர்ச்சையானது. பெண்களுக்கு ஆதரவாக மட்டுமே சட்டங்கள் இருப்பதாக வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மனைவி என்னை கொடுமைப்படுத்தினார்.. அதோடு இல்லாமல் விவாகரத்து வழக்கில் நியாயமே இல்லாமல் பல லட்சங்களை ஜீவனாம்சமாக கேட்டார். வழக்கு நடத்திய நீதிபதியும் என்னிடம் லஞ்சம் கேட்டார் என்று பல குற்றச்சாட்டுகளை சுபாஷ் அடுக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications