நடந்து போனா கூட வேகமாக போய் இருக்கலாம்! பெங்களூரில் 13 கிமீ கடக்க 3 மணி நேரம்! புலம்பி தள்ளிய இளைஞர்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இதற்கிடையே அங்கு வெறும் சில கிமீ கடக்கவே எப்படி தனக்கு 3 மணி நேரம் ஆனது என்பதை நெட்டிசன் ஒருவர் தனது ரெட்டிட் பகிர்ந்துள்ளது. நகரில் டிராபிக் எந்தளவுக்குக் குழப்பமானதாக மாறி வருகிறது என்பதையே இது காட்டுகிறது.
ஒரு காலத்தில் இந்தியாவின் ஐடி தலைநகர் என்று பெங்களூர் புகழப்பட்டது. இதனால் பல ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெங்களூரில் அதிகரித்தன. இதனால் பெங்களூர் குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது. இப்போது நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக இருக்கிறது.

திணறும் பெங்களூர்
ஆனால், இந்த வேகமான அதேநேரம் திட்டப்படாத வளர்ச்சி காரணமாகப் பெங்களூர் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதுதான் டிராபிக்.! பெங்களூரில் இருப்பதைப் போல நாட்டில் வேறு எங்கும் டிராபிக் இருக்காது. அந்தளவுக்கு டிராபிக் உச்சத்தில் இருக்கும். இதன் காரணமாகவே ஐடி தலைநகரை இப்போது சிலர் டிராபிக் தலைநகர் எனச் சொல்கிறார்கள்.
பெங்களூர் டிராபிக் குறித்து இணையத்தில் புலம்பும் பலரை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒருவர் பெங்களூரின் மோசமான கணிக்க முடியாத போக்குவரத்து நெரிசலைப் பார்த்து விரக்தி அடைந்த ஒருவர் தனது ரெடிட் பக்கத்தில் ஒரு போஸ்ட்டை பதிவிட்டிருந்தார். அது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
12 கிமீ கடக்க 3 மணி நேரம்
அந்த நபர் தனது போஸ்ட்டில், "மாலை 6 மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பினேன்.. வீட்டிற்கு வர இரவு 9:15 மணி ஆகிவிட்டது. இதில் விஷயம் என்னவென்றால் எனது வீட்டில் இருந்து அலுவலகம் வெறும் 12 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த 12 கிமீ கடக்கவே எனக்கு 3 மணி நேரம் ஆனது. ஆம்! நீங்கள் படித்தது சரிதான். எனது இந்த அழகிய மாலை நேரத்தை வீணாக்கியது.. இந்த நகரின் மோசமான திட்டமிடலே அதற்குக் காரணம்.
எனது வழக்கமான பேருந்து இன்றும் வரவில்லை. பஸ் எப்போது வரும் என்றும் தெரியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் நான் வேறு பேருந்தில் ஏற வேண்டியிருந்தது, ஆனால் அதிலும் நடுவிலேயே இறக்கிவிடப்பட்டேன். அடுத்து ஆட்டோவை தேட தொடங்கினேன். தேடினேன்.. தேடினேன்... தேடிக்கொண்டே இருந்தேன்.
ஆட்டோவும் சிக்கல்
செயலிகளில் புக் செய்ய முயன்றாலும் யாரும் எடுக்கவில்லை. ரூ.50 கூடுதலாகக் கொடுத்தால் மட்டுமே எடுக்கிறார்கள். இந்த நகரில் ஆட்டோக்கு பெயரளவிலேயே மீட்டர் இருக்கிறது. கடைசியில் நான் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ் டிக்கெட்டை விட ஆட்டோவுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.
3 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடைசியில் இரவு 9 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்தேன். பெங்களூரில் இதுபோல நடப்பது ஆச்சரியம் இல்லை.. மாறாகச் சோர்வாக இருந்தது. அர்பன் பிரச்சினையைச் சரி செய்கிறோம் எனப் பெங்களூரில் ஏகப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வருகின்றன. அவர்கள் நகரின் போக்குவரத்தை மட்டும் தீர்க்காமல் இருப்பது புதிராகவே உள்ளது.
தீர்வே இல்லை
இங்குப் பிரச்சினையை யாரும் தீர்ப்பதாக இல்லை. இதனால் பெங்களூரில் வாழும் மக்கள் இந்த குழப்பம் இயல்பானது என்பதை ஏற்றுக் கொண்டனர். நாங்கள் இதை எப்போதும் எதிர்பார்க்கிறோம். லேட் ஆகும் என்று கருதியே திட்டமிடுகிறோம்.. கூடுதல் சார்ஜரை எடுத்துச் செல்கிறோம்.. கூடுதலாக ஒரு தண்ணீர் பாட்டில் வைத்திருக்கிறோம்.. எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒரு போராட்டத்திற்குத் தயாராகவே கிளம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. பலரும் பெங்களூர் டிராபிக்கால் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நெரிசலான இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கேற்ப மெட்ரோ ரூட்களை அமைக்காதது தவறு எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை எனப் பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications