ரூ.1 கோடிக்கு வீடு வாங்கி.. கழிவறைக்கு கூட.. அருகே உள்ளே மாலுக்கு போகும் நிலைமை.. பெங்களூரில் கொடுமை
பெங்களூர்: பெங்களூரில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக அங்கே வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் செய்துள்ள போஸ்ட் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கோடை காலம் இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக பெங்களூர் திண்டாட தொடங்கி உள்ளது. பெங்களூரில் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் டேங்கர்கள் விலையை உயர்த்துவதாக அங்கே குடியிருப்பாளர்கள் புகார் கூறுகின்றனர். பெங்களூருவின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் டேங்கர் தண்ணீரை நம்பியுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் டேங்கர் நிறுவனங்களே தண்ணீர் வழங்க முடியாமல் தவிக்க தொடங்கி உள்ளன. அங்கே வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் செய்துள்ள போஸ்ட் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
போஸ்ட்: அதில், எங்கள் குடியிருப்பில் தொடர்ந்து 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகம் செய்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. இப்போது நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் வாழக்கூடிய சூழலை விட மிக மோசமாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
பகலில் தண்ணீர் இல்லை, இரவில் கிடைக்கும் போது சேறு கலந்த தண்ணீர் தான் குளிப்பதற்கு கிடைக்கிறது. அது பயன்படுத்த தகுதியற்றது. துவைப்பதற்கும், மற்ற தேவைகளுக்கும் ஈரமான துடைப்பான்கள் மற்றும் டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்த குடியிருப்பாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பெரும்பாலான மக்கள் வீடுகளை காலி செய்துள்ளனர். மற்றவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்குச் சென்றுள்ளனர். கழிவறை அறையில் இருந்து .. மனித மலத்தின் துர்நாற்றத்தை நீங்கள் தொலைதூரத்திலிருந்து கூட உணருவீர்கள். அந்த அளவிற்கு பலரும் தண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளில் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அருகிலுள்ள ஃபோரம் மாலுக்குத்தான் பலரும் கழிப்பறையை பயன்படுத்த செல்கின்றனர். அந்த அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. சமையலைப் பற்றி பேசினால், கண்ணீரே வந்துவிடும்.
பாத்திரங்கள் சுத்தம் செய்யப்படாததால் வெளியில் இருந்து ஆர்டர் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. சிலர் ஒரு ஜோடி ஆடைகள் மற்றும் துண்டுகளுடன் ஜிம்மிற்குச் சென்று குளித்துவிட்டு திரும்பி வருகிறார்கள். 1cr+ கொடுத்த வாங்கிய வீட்டுக் கடனுக்காக Emi ஐச் செலுத்தும்போது தாங்க முடியாத அளவுக்கு ஏமாற்றமும் வேதனையும் வருகிறது.
அறிவுரை: எப்போதும் டேங்கர் தண்ணீரைச் சார்ந்திருக்கும் பெங்களூரில் ஒரு பிளாட் வாங்காதீர்கள். இப்படி கஷ்டப்படுவதை விட மன நிம்மதியுடன் வாடகை வீட்டில் வாழ்வது நல்லது என்று அந்த நபர் போஸ்ட் செய்துள்ளார்.
என்ன காரணம்?: மழைப்பற்றாக்குறை, ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பது, நிலத்தடி நீர் குறைதல், உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமை, தண்ணீர் டேங்கர் மாஃபியா எனப் பல காரணங்கள் தற்போதைய தண்ணீர்ப் பிரச்னைக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன..
பெங்களூரின் நீர் விநியோகத்திற்கு பொறுப்பான அமைப்பான பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), காவிரி ஆற்றில் இருந்து அதிக தண்ணீரைப் பெறுகிறது. ஆனால் இந்த முறை குறைவான மழையால் காவிரியில் தண்ணீர் இல்லை. காவிரி நீர் இணைப்புகள் இல்லாத பகுதிகள் போர்வெல் அல்லது டேங்கர் தண்ணீரை நம்பியே உள்ளன. அவையும் வற்ற தொடங்கி உள்ளன.
பெங்களூரில் காவிரியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 1,450 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீரைப் பெறும் அதே வேளையில், நகரம் இன்னும் ஒரு நாளைக்கு 1,680 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறைதான் தண்ணீர் பிரச்சனைக்கு பெரிய காரணம்.












Click it and Unblock the Notifications