பிரதமர் வீடு முன்னாடியே ரோட்டுல பள்ளம்.. பெங்களூரை மட்டும் டார்கெட் பண்ணீங்களே ஏன்? டிகே சிவக்குமார்
பெங்களூர்: பிரதமர் இல்லத்தின் முன்பாக உள்ள சாலை கூட குண்டும் குழியுமாக உள்ளது. ஆனால் பலரும் கர்நாடகாவை மட்டும் டார்கெட் செய்கின்றன என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரில் சாலைகள் மிக மோசமாக உள்ளதாக பிளாக்பக் என்ற முன்னணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் யபாஷி கூறியிருந்த நிலையில் டி.கே சிவக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவின் ஐடி தலைநகர் என்று அழைக்கப்படுவது பெங்களூர். இன்போசிஸ் உள்பட நாட்டில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் இங்கேதான் உள்ளன. பெங்களூரில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை, உள்கட்டமைப்பு என பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு அங்கு அதிக அளவில் ஐடி நிறுவனங்கள் அலுவலகங்கள் அமைத்து இயங்கி வருகின்றன.

பெங்களூரில் சாலைகள் மோசமாக இருக்கிறது
சிலிகான் சிட்டி என்ற பெருமையையும் பெங்களூர் கொண்டுள்ளது. இந்த நிலையில்தான் சமீபத்தில் பிளாக்பக் என்ற முன்னணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் யபாஷி தனது எக்ஸ் பதிவில், பெங்களூர் சாலைகள் மிக மோசமாக உள்ளதாக பதிவிட்டிருந்தார். தனது எக்ஸ் பதிவில் அவர் கூறியதாவது:-
கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பெல்லந்தூர் பகுதியில் எங்கள் அலுவலகம், வீடு இருக்கிறது. எங்கள் அலுவலகம் முன்பாக செல்லும் சாலையின் நிலைமை மோசமாக உள்ளது. இந்த சாலை, பள்ளங்கள், தூசிகளாக உள்ளது. ஊழியர்களின் சராசரி பயணம் தினமும் ஒன்றரை மணி நேரம் அதிகரித்துள்ளது.
டி.கே சிவக்குமார் பதிலடி
ஐந்து ஆண்டுகளாக எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. தற்போது இங்கே தொடர்வது மிகவும் கடினமாக உள்ளது. இங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம்" என்று கூறியிருந்தார். பெங்களூர் தனியார் நிறுவன சி.இ.ஓவின் இந்த கருத்து பெங்களூர் சாலை உள்கட்டமைப்பின் தரம் குறித்த விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இவ்விவகாரம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் இல்லத்தின் முன்பாக உள்ள சாலை கூட குண்டும் குழியுமாக உள்ளது. ஆனால் ஊடகங்கள் கர்நாடகாவை மட்டும் டார்கெட் செய்கின்றன.
கர்நாடகாவை மட்டும் குறி வைக்கிறார்கள்
சாலையில் பள்ளங்கள் என்பது எல்லா இடங்களிலும் உள்ளன. டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் கூட இந்த பிரச்சினை உள்ளது. ஆனால், நியாயமற்ற முறையில் கர்நாடகாவை மட்டும் ஊடகங்கள் குறிவைக்கின்றன. பெங்களூர் சாலைகளில் உள்ள பள்ளங்கள் குறித்து ஊடகங்கள் உன்னிப்பாக ஆராய்வது காங்கிரஸ் ஆளும் அரசுக்கு எதிராக வகுக்கப்படும் சதியாகும்.
சென்னையில் சாலைகள் மேம்பட்டு இருக்கிறது
அனைத்து இடங்களிலும் இந்த பிரச்சினை இருக்கும் போது அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல், கர்நாடகாவில் உள்ளதை மட்டும் பெரிதுபடுத்துகின்றன" என்றார். பெங்களூர் சாலைகளை ஒப்பிடும் போது சென்னையில் உள்ள சாலைகள் மேம்பட்ட நிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது.
இது தொடர்பாக வாகன ஓட்டிகள் கூறுகையில், பெங்களூரை ஒப்பிடும் போது சென்னையின் சாலைகள் உலக தரத்துடன் இருப்பதை பார்க்க முடிகிறது. பிரதான சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டு, சிறிய பள்ளங்கள் இருந்தாலும் அதை செப்பனிடும் பணிகள் நடக்கின்றன. இதனால், பெங்களூர் சாலைகளை ஒப்பிடும் போது சென்னையின் சாலையின் தரம் சிறப்பாக உள்ளது" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications