அம்மாவை கொன்று சூட்கேஸில் போட்டு.. போலீஸ் நிலையம் எடுத்து வந்த இளம்பெண்! மிரண்டு போன பெங்களூர்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இளம் பெண் ஒருவர் தனது அம்மாவை கொடூரமாகக் கொலை செய்து சூட்கேஸில் எடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் கடந்த சில காலமாகவே நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் மும்பையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுத் துண்டு துண்டாக வெட்டப்பட்டார்.

இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே இப்போது அப்படி ஒரு மிக மோசமான கொலை சம்பவம் தான் கர்நாடக தலைநகர் பெங்களூர் நடந்துள்ளது.
பெங்களூர்: நேற்று மதியம் கர்நாடக தலைநகர் பெங்களூரில் பெண் ஒருவர் தனது சூட்கேஸுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். போலீசார் அந்த பெண்ணிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பெண் தனது தாயின் உடலை சூட்கேஸில் அடைத்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளார்,
அதைப் பார்த்தவுடன் ஷாக்கான போலீஸ் அந்த பெண்ணிடம் முதற்கட்ட விசாரணையை நடத்தினர். அதில் அந்தப் பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் பிசியோதெரபிஸ்ட்டாக உள்ளதும் தெரிய வந்தது. நேற்று மதியம் 1 மணியளவில் அந்தப் பெண் இப்படி தாயாரின் உடலை சூட்கேஸில் எடுத்து வந்துள்ளார். மேலும், தனது தாயைக் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சூட்கேஸில் உடல்: அந்த சூட்கேஸில் பெண்ணின் உடல் இருந்த நிலையில், அத்துடன் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் கணவரின் போட்டோ ஒன்றும் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் பிவா பால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் குறித்து கூடுதல் தகவல் சேகரிக்கும் முயற்சியில் போலீசார் இப்போது இறங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பெங்களூரில் உள்ள மைக்கோ லே அவுட் காவல் நிலையத்தில் நடந்துள்ளது. 30களில் இருக்கும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. அவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்.
என்ன நடந்தது: இந்த இளம்பெண்ணுக்கும் அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்குமாம். அதன்படி நேற்றும் இருவருக்கும் இடையே பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் தாங்காமல் இளம்பெண் தனது தாயாருக்கு முதலில் தூக்க மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட சற்று நேரத்தில் தாயார் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த துணி ஒன்றை எடுத்து அதை வைத்து அழுத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து சரணடைந்த அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இப்போது அடுத்தகட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications