பெங்களூர் அமராவதிக்கு 4000 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் வாங்க ஆசை.. ஒரு கோடி காலி.. எப்படி?
பெங்களூர்: பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே சாய் லே-அவுட்டில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவரின் மனைவிக்கு தங்க நகை வியாபாரி என்று கூறி ஒருவர் அறிமுகம் ஆனார். தொழில் அதிபர் மனைவி அமராவதியிடம் அந்த நகை வியாபாரி, ஒரு கிராம் தங்கத்தை ரூ.4 ஆயிரத்துக்கு கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய அமராவதி, ஒரு கோடி ரூபாயை ஏமாந்துள்ளார். ஏமாற்றியது நான்கு பேர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எப்படி ஏமாற்றினார்கள் என்பதை பார்ப்போம்.
தங்க நகை ஒரு பவுன் 66 ஆயிரம் ரூபாயை கடந்துவிட்டது. செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்தால் ஒரு பவுன் தங்க நகை 72 ஆயிரம் என்கிற அளவிற்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 8200 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. இந்த சூழலில் ஒருவர் தங்கத்தை பாதி விலைக்கு தருவதாக கூறி ஏமாற்றி உள்ளார். அதுவும் ஒரு கிராம் தங்கத்தை 4000 ரூபாய்க்கு தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அப்படி சொல்லி ஏமாற்றி ஒரு கோடி ரூபாயை வாங்கியுள்ளார். பெங்களூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூர் கே.ஆர்.புரம் அருகே சாய் லே-அவுட் பகுதியில் அமராவதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் தொழில் அதிபர் ஆவார். கடந்த 2024ம் ஆண்டு தனது வீட்டில் இவர் ஒருமுறை அமைதி பூஜை என்ற பெயரில் பூஜை ஒன்றை நடத்தியிருந்தார். இந்த பூஜையில் கோபால கிருஷ்ணா என்பவர் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் தங்க நகை வியாபாரி எனக்கூறி அமராவதியிடம் அறிமுகமாகி உள்ளார். இதனால் அமைதி பூஜைக்கு கோபால கிருஷ்ணாவையும் அழைத்திருந்துள்ளாராம் அமராவதி.
அதன்பிறகு, சில நாட்கள் கழித்து ராகேஷ் ரெட்டி என்பவருடன் அமராவதி வீட்டுக்கு கோபால கிருஷ்ணா வந்தாராம், அப்போது ராகேஷ் ரெட்டியிடம் ரூ.300 கோடிக்கு அமெரிக்க டாலர் இருக்கிறது என்றும், அதன் மூலம் தங்க கட்டிகள் வாங்கி வியாபாரம் செய்ய உள்ளதாகவும், உங்களுக்கு தேவைப்பட்டால் ஒரு கிராம் தங்கத்தை ரூ.4 ஆயிரத்துக்கு கொடுப்பதாகவும் அமராவதியிடம் கோபால கிருஷ்ணா ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
கோபாலகிருஷ்ணா, ராகேஷ் குமார் உள்பட 4 பேர் தங்களிடம் இருந்த ஒரு தங்க கட்டியையும் அவரிடம் காண்பித்திருக்கிறார்கள்.அந்த தங்க கட்டியை தான் நகைக் கடைகளுக்கு விற்று வருவதாக கூறி சில ஆதாரங்களையும் அமராவதியிடம் காட்டினார்களாம். இதை உண்மை என்று நம்பிய அமராவதி அவர்களிடம் இருந்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரம் ரூபாய் விலையில் தங்க கட்டிகளை வாங்கி கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.
இதற்கு முன் பணமாக ரூ.1 கோடியையும் கோபாலகிருஷ்ணா உள்ளிட்டோரிடம் அவர் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை வாங்கிய அவர்கள், அமராவதிக்கு தங்க கட்டிகளை கொடுக்கவில்லையாம். வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க கட்டிகள் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கி விட்டதாக கூறி காலம் கடத்தி வந்திருக்கிறார்கள். மாறாக ரூ.1 கோடியை திருப்பி கொடுக்கும்படி கேட்டும், 4 பேரும் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்களாம்.
ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமராவதி, பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரை சந்தித்து நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அதன்பேரில் விசாரித்த பெங்களூர் குற்றப்பிரிவு போலீசார், கோபால கிருஷ்ணா, ராகேஷ் ரெட்டி, யஷ்வந்த் குமார், ரூபா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் தலைமறைவான 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். 4000 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் வாங்க ஆசைப்பட்ட பெண், ஒரு கோடி ரூபாயை இழந்திருப்பது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications