International Booker Prize: சர்வதேச புக்கர் விருதை வென்று.. சாதனை படைத்த கன்னட எழுத்தாளர்!
பெங்களூர்: ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த புத்தகங்களுக்கு 'சர்வதேச புக்கர் விருது' வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கர்நாடகாவை சேர்ந்த எழுத்தாளர் பானு முஷ்டாக், மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
எழுத்தாளர் பானு முஷ்டாக், எழுத்தாளராக மட்டுமல்லாது சிறந்த செயற்பாட்டாளராகவும், வழக்கறிஞராகவும் அறியப்படுகிறார். பானு கடந்த 1990 முதல் 2023 வரை 30 ஆண்டுகளாக இவர் எழுதிய 12 சிறுகதைகளையும் கன்னட மொழியில் 'Hridaya Deepa' என்கிற பெயரில் தொகுத்து வெளியிட்டிருந்தார். இதனை பத்திரிகையாளர் தீபா பாஷ்டி, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, 'ஹார்ட் லேம்ப்'(Heart Lamp: Selected Stories) என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தார்.

இந்த படைப்புக்குதான் 'சர்வதேச புக்கர் விருது' இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. விருது தொகை ரூ.57.33 லட்சமாகும். இது இருவருக்கும் சமமாக பங்கிட்டு கொடுக்கப்படும்.
புக்கர் விருது இரண்டு வகைப்படும். 'புக்கர்' விருது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலுக்கு வழங்கப்படும். இந்தியாவில் அருந்ததி ராய் உட்பட 5 பேர் இந்த விருதை வென்றிருக்கின்றனர். ஆனால், 'சர்வதேச புக்கர் விருது' என்பது மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும். இந்தியாவில் இதற்கு முன்னர் கீதாஞ்சலி ஸ்ரீ என்பவர் மட்டுமே இந்த விருதை வென்றிருந்தார். இவர் 'டோம்ப் ஆஃப் சாண்ட்' இந்தி இலக்கிய படைப்பை உருவாக்கியிருந்தார். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.
அதற்கு அடுத்து இரண்டாவதாக இந்த விருதை பெறும் இந்தியர் பானு முஷ்டாக்தான். மட்டுமல்லாது கன்னட எழுத்தாளர் ஒருவர் இந்த விருதை பெறுவதும் இதுவே முதல்முறையாகும்.

பானு முஷ்டாக்கின் சிறுகதைகள் எழுத்தாளர் வட்டத்தில் பெரிதும் அறியப்பட்டிருந்தாலும், இந்த விருது அவரது படைப்புகளை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லும். தனது இலக்கிய படைப்பில், இஸ்லாமிய பெண்கள் சந்திக்கும் துயர்களை பானு விவரித்திருக்கிறார். பழமைவாதம் மற்றும் ஆணாதிக்க சமூகம் இஸ்லாமிய பெண்களை எப்படியெல்லாம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை இந்த கதைகள் விவரிக்கின்றன.
கர்நாடகாவில் சாதாரண இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவர் முதலில் கற்றது என்னவோ உருதுதான். ஆனால் உருது மட்டுமே போதுமானது இல்லை என்பதை உணர்ந்த இவரது தந்தை, கன்னட மொழியையும் படிக்க வைத்திருக்கிறார். 6 வயது வரை உருது பயின்ற குழந்தைக்கு கன்னடம் எப்படி உடனே வரும்? பானு இந்த சிக்கலை எதிர்கொண்டார். இருப்பினும் கன்னட மக்கள் மத்தியில் பானு வளர்ந்தால் அம்மொழியை கற்றுக் கொள்வது ஓரளவுக்கு சுலபமாகவே இருந்திருக்கிறது.
இவரது முதல் சிறுகதை, 26 வயதில் ஒரு சிறிய இதழில் வெளியாகியுள்ளது. ஆனால் காதல் திருமணமும், குடும்பம் எனும் அமைப்பும் எழுத்துக்கு மிகப்பெரிய தடையாகவே இருந்திருக்கிறது. இப்போது இவரது எழுத்துக்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், இப்போது அவர் சொல்வது இதுதான்,
"இந்த சமூகம் நிறைய மாறியிருக்கிறது. ஆனால் பல முக்கிய பிரச்சனைகள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது. சூழல் மாறினால் கூட, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டங்கள் இன்னும் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications