கர்நாடக அரசியலில் திருப்பம்.. முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை! இன்று பதவியேற்பு
பெங்களூர் : கர்நாடக பாஜக சட்டசபை குழுத் தலைவராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் நாளை மதியம் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
Recommended Video
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்ஆர் பொம்மை மகன்தான் இந்த பசவராஜ் பொம்மை.
எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமாக அறியப்படும் இவர் அவரது அமைச்சரவையில் உள்துறை, சட்டத்துறை போன்ற முக்கியத் துறைகளை தன்வசம் வைத்திருந்த சீனியர் அமைச்சராகும்.
கர்நாடக அடுத்த முதல்வர் யார்.. இன்று இரவு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.. பெரும் எதிர்பார்ப்பு!
லிங்காயத்து சமூகம்
பசவராஜ் பொம்மை எடியூரப்பா போலவே லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஹாவேரி மாவட்டம் இவரது சொந்த ஊர் ஆகும். லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடத்தால் வற்புறுத்தப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், லிங்காயத்து மடாதிபதிகள் மற்றும் சமுதாய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அதிருப்தியை போக்கும் வகையில் அதே சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்
எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமான பசவராஜ் பொம்மை முதல்வராக வருவது எடியூரப்பாவுக்கும் மகிழ்ச்சிகரமான விஷயம் என்று கூறப்படுகிறது. இவரது பெயரை பாஜக மேலிடத்துக்கு எடியூரப்பா பரிந்துரை செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த பசவராஜ் பொம்மை
1960 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்தவர் பசவராஜ் பொம்மை. 2008ஆம் ஆண்டு தான் பாஜகவில் சேர்ந்தார். ஆனால் அதன் பிறகு இவரது வளர்ச்சி மிக வேகமாக இருந்தது. பசவராஜ் பொம்மை இருமுறை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஜனதா பரிவார் இயக்கத்தில் இருந்து வந்த பசவராஜ் பொம்மை தந்தை எஸ்ஆர் பொம்மை 1988ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஆளுநர் வெங்கடசுப்பையா அந்த அரசைக் கலைத்தார். இதை எதிர்த்து எஸ்ஆர் பொம்மை உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இப்போது வரை கட்சி தாவல் மற்றும் மாநில அரசுகளை கலைக்கும் மத்திய அரசின் செயல்களுக்கு ஒரு அளவுகோலாக மாறியிருக்கிறது. இப்போதும்கூட உச்சநீதிமன்றத்தில் எஸ்ஆர் பொம்மை வழக்கு முன்னுதாரணமாக காட்டப்படுகிறது. ஒரு மாநில அரசை கலைப்பதற்கு என்னென்ன மாதிரியான வழிமுறைகளை கையாள வேண்டும் என்று மிகத் தெளிவான வரைமுறைகளை இந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இதன்பிறகு எஸ்ஆர் பொம்மை ல், தேவகவுடா தலைமையிலான மத்திய அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். இப்படியான பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் பசவராஜ் பொம்மை. அனைத்து கட்சியினர் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இடமும் சுமூகமாக பழகக் கூடியவர் என்பதால் இவர் முதல் சாய்ஸாக இருக்கிறார். இதனுடைய பெங்களூரில் இன்று இரவு நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் குழுக்கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பெயரை சட்டசபை குழு தலைவராக எடியூரப்பா முன்மொழிந்தார். அதாவது புதிய முதல்வரின் பெயர் எடியூரப்பாவால் அறிவிக்கப்பட்டது. இதை மூத்த அமைச்சர் கோவிந்த கார்ஜோல் வழிமொழிந்தார். இதையடுத்து கர்நாடக பாஜக சட்டசபை குழுத் தலைவராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நாளை பிற்பகல் 3.30 மணி அளவில் முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்க உள்ளார்.