ஷாக்கிங்.. ஓங்கி அறைந்து.. கொரோனா டெஸ்டுக்கு மக்களை இழுத்து செல்லும் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள்
பெங்களூர்: கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தி பெருநகர பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள், இளைஞர்களின் கையை பிடித்து இழுத்து, அவர்கள் தலையில் அடித்து வலுக்கட்டாயப்படுத்தும் திடுக்கிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டிலேயே, கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரம் பெங்களூர். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 27 ஆயிரம் கேஸ்கள் வரை பதிவானது. ஆனால், தற்போது முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது, எனவே அங்கு பரிசோதனைகள் அளவு குறைந்துள்ளது.
இதன் காரணமாக நோய்தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும் குறைவாக காணப்படுகிறது. பரிசோதனை எண்ணிக்கையை குறைத்ததன் காரணமாகத்தான் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

பரிசோதனை அளவு குறைந்தது
ஊரடங்கு உத்தரவு காரணமாக பரிசோதனைக்கு செல்ல மக்கள் விரும்புவதில்லை. வெளியூர்களில் இருந்து, பஸ்கள், ரயில்கள் வருவது குறைந்து விட்டதால் அந்த பரிசோதனை அளவும் குறைந்துவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், பரிசோதனைகளை, அதிகரிப்பதற்காக பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கையை முறுக்கி தாக்குதல்
பெங்களூரின் நசரத்பேட்டை சாலையில் உள்ள குடியிருப்பில் தங்கியுள்ள சில இளைஞர்களிடம் வலுக்கட்டாயப்படுத்தி மாநகராட்சி ஊழியர்கள் பரிசோதனை நடத்தியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவிக்காத ஒரு இளைஞரை சட்டை காலரை பிடித்து தரதரவென இழுத்துச் செல்கிறார்கள். அப்படியும் சம்மதிக்காத நிலையில் அவரது கைகளை முறுக்கி இழுத்து கீழே தள்ளிவிட்டு அடிக்கிறார்கள். அவர் நான் சோதனை செய்ய மாட்டேன் என ஹிந்தியில் சொல்வதை கேட்க முடிகிறது. ஆனால், அவர் தலையை பரிசோதனை நடத்தும் டேபிளில் அழுத்திபிடித்து மாநகராட்சி ஊழியர்கள் அடிக்கிறார்கள்.
|
பலருக்கும் அடி, உதை
இது ஒரு சம்பவம் கிடையாது. மேலும் பலரை இது போல இழுத்து அடித்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. யாரையும் அவர்கள் விருப்பபடாமல் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது. ஆனால் அடித்து இழுத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்துவது காட்டுமிராண்டித்தனம் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுபோல அநாகரீக செயல்களில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எடியூரப்பா அரசு
ஒரு பக்கம் சென்னை மாநகராட்சி ஊழியர்கள், கொரோனா பாதித்தவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் நிலையில், பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள் இப்படி அடாவடி செய்துள்ளனர். பெங்களூர் மாநகராட்சி தற்போது பாஜக வசம் இருக்கிறது. மாநிலத்திலும் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்கீடு செய்வதில் தோல்வி, இன்னொரு பக்கம் சும்மா இருப்பவர்களை அடித்து இழுத்துச் சென்று பரிசோதனை நடத்துவது என பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது அந்த அரசு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications