2014க்கு முன் ”அவங்க” தான் பிரதமர்.. காங்கிரஸ் ஆட்சியை கிண்டல் செய்த மத்திய அமைச்சர் அமித் ஷா!
பெங்களூரு: 2014ம் ஆண்டுக்கு முன் இந்தியாவின் பிரதமர் பதவியில் இருந்தவரை, காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் பிரதமராக கருதவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிண்டல் செய்துள்ளார்.
2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியை பாஜக தொடங்கியுள்ளது. அண்மையில் பீகார் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான். இதனால் பாஜகவை வெற்றிபெற வைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி குறித்த புகழுரைகளும் அதிகரித்துள்ளன.

கர்நாடகாவுக்கு பயணம்
இந்த நிலையில் கர்நாடகாவுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக பெங்களூருவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பாக 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஆட்சியை செய்து வருவதாக தெரிவித்தார்.

அமித் ஷா பேச்சு
தொடர்ந்து பேசிய அமித் ஷா, கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சீர்திருத்தங்கள் நடைபெற்றுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயத்தையும் முன்னிறுத்தியே பாஜக செயல்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டுக்கு முன் நமது நாட்டின் பிரதமராக இருந்தவர், பிரதமராக கருதப்படவில்லை.

”அவங்க” தான் பிரதமர்
ஒவ்வொரு அமைச்சரும் அவங்க அல்லது அவரை தான் பிரதமராக கருதினார்கள் என்று சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை மறைமுகமாக கிண்டல் செய்தார். தொடர்ந்து, அப்போது நாட்டின் கொள்கை ரீதியாக முடங்கி இருந்தனர். கிட்டத்தட்ட ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஊழல் நடைபெற்றது. மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் இருந்தது.

பாஜக ஆட்சி
தொழில்துறையினர் எளிமையாக தொழில் செய்ய முடியாமல் தவித்தனர். இந்தியாவில் பெரும்பான்மை தொழில்துறையினரின் நிலை இப்படி தான் இருந்தது. இவையனைத்தும் சேர்ந்துதான் 2014ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றியடைய வழிவகுத்தது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications