“அமைச்சர் பதவி சுகத்துக்காக அதிமுகவை அழிக்கிறார் சி.வி.சண்முகம்” - அக்ரி கிருஷ்ணமூர்த்தி காட்டம்!
சென்னை: "சி.வி.சண்முகம் அமைச்சர் பதவி என்ற சுகத்துக்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்" என அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது சுயநலத்துக்காக தவெகவுடன் இணைந்துள்ளார் என அவர் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. அதிமுக சார்பில் 47 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்ற நிலையில் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்களும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தவெக அமைச்சரவையில் இடம்பெற சிவி சண்முகம் தரப்பு காய்நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
சிவி சண்முகம் பதவி சுகத்திற்காக
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர். பின்னர், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் சி.வி.சண்முகம். அதன் பிறகு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளாராக பொறுப்பேற்ற பிறகு இழந்த மாவட்டச் செயலாளர் பதவியை அவருக்கு திரும்பக் கொடுத்தார் இபிஎஸ்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சி.வி.சண்முகம் தோல்வி அடைந்தார். இதனையடுத்து மேலவை பதவியை வற்புறுத்தி கேட்டார். இதற்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கினார். 3 ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்த பிறகு மீண்டும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமைச்சரவையில் இடம்பெற திட்டமிட்டார்.
அந்த வகையில் இந்த முறை மயிலம் தொகுதிக்கு மாறி போட்டியிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் அவரது பரிந்துரையின் பேரிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் மயிலம் தொகுதியில் சி.வி.சண்முகம் மட்டும் வெற்றி பெற்றார். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகம் மட்டுமே காரணம்.
அதிமுகவின் வளர்ச்சிக்காக எந்தவித பணியையும் சிவி சண்முகம் மேற்கொள்ளவில்லை. தனது சுயநலத்துக்காக, சுய லாபத்துக்காக இன்று நாம் யாரை எதிர்த்துப் போட்டியிட்டோமோ அவர்களுடன் இணைந்து அமைச்சர் பதவி என்ற சுகத்துக்காக இந்த இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்.
அதிமுக தோல்விக்கு வேலுமணி - சிவி சண்முகமே காரணம்
எஸ்.பி. வேலுமணிக்கு தலைமை நிலைய செயலாளர் பொறுப்பை வழங்கியதும் எடப்பாடி பழனிசாமி தான். கோவையில் 10 தொகுதிகளும், நீலகிரி மற்றும் திருப்பூர் என மொத்தமாக 21 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டார். இதில் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதிலும் கோவையில் எஸ்.பி.வேலுமணி மட்டும் வெற்றி பெற்றார்.
எனவே அவர்கள் மீதுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 73 தொகுதிகளிலும், 2026ஆம் ஆண்டு தேர்தலில் 53 இடங்களிலும் வெற்றியை பெற்றோம்.
அதே நேரம் திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தோல்வி அடைந்த நிலையில் 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.
எடப்பாடிக்கு 95% பேர் ஆதரவு
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மொத்தமுள்ள 78 மாவட்ட செயலாளர்களில், 75 பேர் பங்கேற்றுள்ளனர். விசுவாசமாக இருப்போம் உறுதியாக செயல்படுவோம் என கையொப்பமிட்டுச் சென்றுள்ளனர். தலைமை நிலைய செயலாளர்கள் 89 வந்தனர். எனவே ஒட்டு்மொத்தமாக 95% பேர் ஆதரவு உள்ளது. அதிமுக சிறந்த எதிர்கட்சியாக செயல்படும்.
என்ன முடிவெடுத்தாலும் முழு ஆதரவு தருகிறோம் என தெரிவித்துள்ளனர். தற்போது சி.வி.சண்முகம் ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். இன்னும் இரண்டு ஆண்டு கால பதவியானது உள்ளது. தற்போது அமைச்சராகலாம் என்ற காரணத்தால் மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் மக்களவையில் 5 உறுப்பினர்கள் இருந்தால் தான் அங்கீகாரம் கிடைக்கும் தற்போது அதிமுகவின் அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications