Vijay: தாம்பரம் சம்பவம்.. ஆக்ஷன் மோடில் இறங்கிய விஜய்.. “ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்” 300 ரவுடிகளுக்கு குறி!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாக, சென்னை போலீசார் நேற்று இரவு முதல் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இன்று அதிகாலை வரை நடைபெற்ற தீவிர சோதனை மற்றும் கைது நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்தார். அதன் அடிப்படையில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் ஆகியோர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வரின் உத்தரவுகளின் அடிப்படையில் "ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்" என்ற பெயரில் சென்னை முழுவதும் திடீர் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் 12 காவல் மாவட்டங்களிலும் போலீசார் தீவிரமாகச் செயல்பட்டனர். அடையாறு, புளியந்தோப்பு பகுதியில் அதிகப்படியான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக அடையாறு வட்டத்தில் இருந்து மட்டும் 19 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து புளியந்தோப்பில் 20 பேர், அண்ணாநகரில் 9 பேர், திநகரில் 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நேற்று இரவில் இருந்து துவங்கிய இந்த காவல் துறையின் வேட்டையில் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரவுடிகள் பெரும்பாலும் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் அல்லது ஏற்கனவே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்.
ஏன் இந்த அதிரடி நடவடிக்கை?
மே 17ஆம் தேதி தாம்பரம் அருகே இரண்டு இளைஞர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏழு ரவுடிகள் அந்தக் கொலையில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். இதில் 2 பேர் 18 வயதக்கு உட்பட்டவர்கள்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு முன்விரோதம் காரணமாக மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இந்த ப்ரிவென்டிவ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்குகளில் இருந்து வெளியே வந்தவர்களும் மீண்டும் அதே செயலில் ஈடுபடாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் தரப்பில் கூறுகையில், இந்த ஆபரேஷன் இரண்டு நாட்கள் தொடரும் என்றும், மொத்தம் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் பிரமாணப் பத்திரம் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பத்திரத்தில் கையெழுத்திட்டால், மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் சைதாப்பேட்டை மற்றும் எழும்பூர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேவேளையில் போதைப்பொருள் தடுப்புப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். சமூக வலைதளங்கள் வாயிலாக போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக வரும் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தும் முதலமைச்சர் விஜய் அரசின் உறுதியான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்கும் வகையில் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இதுபோன்ற கண்காணிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications