ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்!
சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு மிக உயரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தனது தேர்தல் அறிக்கையிலேயே தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த கையோடு அவர் ரோந்து வாகனத்தையும் இயக்கினார்.
சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், பெண்களுக்கான பிரத்தியேக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' (Singappen Special Action Force) என்ற புதிய பாதுகாப்புப் பிரிவை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்தத் தொடக்க விழாவின் மிக முக்கிய நிகழ்வாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான பிரத்தியேக புதிய இலச்சினையை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவசரக் காலங்களில் மிக விரைவாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை எடுப்பதற்காக இந்த அதிரடிப்படைக்கு அதிநவீன வசதிகள் கொண்ட புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ரோந்து வாகனங்களும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
திட்டத்தைத் தொடங்கி வைத்த கையோடு, அங்கிருந்த ஒரு புதிய 'சிங்கப்பெண்' ரோந்து வாகனத்தை நோக்கிச் சென்ற முதல்வர் விஜய், அதன் ஓட்டுநர் இருக்கையில் திடீரென அமர்ந்தார். அங்கிருந்த அதிகாரிகளே சற்றே வியந்து பார்க்க, அந்த ரோந்து வாகனத்தை அவரே நேரிடையாக ஸ்டியரிங் பிடித்து, ஓட்டிச் சென்று இயக்கிப் பார்த்தார். முதலமைச்சர் விஜய் அந்த ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்ற காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் வெளியாகி டிரெண்டடாகி வருகிறது.
இந்த 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை', முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளது. பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால், இந்தச் சிறப்பு அதிரடிப்படைப் பெண்கள் உடனடியாகக் களம் இறங்கிச் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications