இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி
டெல்லி: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது பற்றி சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த மம்தா பானர்ஜி ஏன் 1998 ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்? என்பது பற்றியும், இப்போது காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கியமாவது பற்றிய பேச்சுவார்த்தையின் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
மம்தா பானர்ஜி.. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக வலம் வந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையான மேற்கு வங்கத்தில் அந்த கட்சியை தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி வீழ்த்தி 2011, 2016, 2021 என்று 3 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் முறையில் முதல்வர் அரியணையில் அமர்ந்தவர்.

ஆனால் தற்போது மம்தா பானர்ஜி நிலைக்குலைந்து போய் உள்ளார். சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளில் பாஜக 207 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மம்தா பானர்ஜி ஆட்சியை மட்டும் பறிகொடுக்கவில்லை. அவர் போட்டியிட்ட சட்டசபை தொகுதியிலும் தோல்வியை தழுவினார். மேற்கு வங்கத்தின் பாபனிபூர் தொகுதியில் களமிறங்கிய மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். தற்போது சுவேந்து அதிகாரி தான் பாஜகவின் மேற்கு வங்க முதல்வராக உள்ளார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 60 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அந்த பிரச்சனையை தீர்க்க முடியாமல் தவித்த நேரத்தில் மம்தா பானர்ஜிக்கு அவரது எம்பிக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். லோக்சபாவின் 20 எம்பிக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கட்சி தாவும்போதோ அல்லது தனி அணியாக பிரியும்போதோ மொத்த எண்ணிக்கையில் 3ல் 2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தால் அவர்களை கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியாது. தற்போது மம்தா பானர்ஜியால் தனி அணியாக செயல்படும் சொந்த கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மம்தா பானர்ஜி நொந்துபோய் உள்ளார்.
இதற்கிடையே தான் கடந்த 8 ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். கூட்டம் முடிந்தும் அவர் இன்னும் மேற்குவங்கம் திரும்பவில்லை. அவர் டெல்லியிலேயே தங்கி சோனியா காந்தியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மம்தா பானர்ஜி தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல், மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, ராகுல் காந்தியை சந்தித்து பேசி வருகிறார். இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை காங்கிரஸுடன் இணைப்பதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இதுதான் தற்போது இந்திய அரசியலில் 'டாக் ஆப் தி டவுன்' ஆக உள்ளது. ஏனென்றால் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை 1998 ல் தொடங்கினார். இப்போது 28 ஆண்டுகள் கழித்து அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் பாஜகவின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், தனது அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்கவும் மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின்போது மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸின் தேசிய துணைத் தலைவர் பதவி அல்லது மாநிலங்களவை (லோக்சபா) எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்றும், மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு காங்கிரஸில் தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இப்படி இருக்கும்போது கடந்த 1998ல் மம்தா பானர்ஜி ஏன் காங்கிரஸை விட்டு தனிக்கட்சி தொடங்கினார்? என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது. அதுபற்றி அறிய பலரும் துடிக்கின்றனர். அதற்கான விடையை தருகிறோம். மேற்கு வங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது. 1997, 1982, 1987, 1991, 1996 என்று தொடர்ந்து 5 தேர்தல்களில் அந்த கட்சி வென்றதோடு 5 முறையும் ஜோதி பாசு தான் முதல்வராக இருந்தார். 1998 ம் ஆண்டிலும் அவர் முதல்வராக இருந்தார்.
கம்யூனிஸ்ட் அரசை வீழ்த்த வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்ட மம்தா பானர்ஜி தீவிரமாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த மம்தா பானர்ஜி, ஜோதி பாசு அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. சாப்ட்டாக செயல்பட்டனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் மேற்கு வங்க மாநில கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக மம்தா நினைத்தார். இதனால் மம்தா பானர்ஜி அதிருப்தியானார். அதுமட்டுமின்றி
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டிக்குள் மம்தா பானர்ஜிக்கும், அப்போதைய சீனியர் தலைவரான சோமன் மித்ராவுக்கும் இடையே அதிகார போட்டி இருந்தது. மேற்கு வங்க அரசுக்கு எதிராக மம்தாவின் போராட்டங்களுக்கு கட்சியின் மாநில தலைமை முட்டுக்கட்டை போட்டது.
இதனால் கேபாமான மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளை வீழ்த்த வேண்டுமானால், காங்கிரஸின் டெல்லி தலைமையையோ அல்லது மாநிலத் தலைவர்களையோ நம்பியிருக்கக் கூடாது. தனி கட்சி தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து 1998 ஜனவரி 1ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மம்தா பானர்ஜி உருவாக்கினார். இருப்பினும் அவரால் உடனடியாக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடினார்.
2000ம் ஆண்டு முதல் 2011 வரை முதல்வராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாசாரியாவை 13 ஆண்டுகள் போராடி 2011 சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி முதல் முறையாக முதல்வரானார். அதன்பிறகு அவரது ஆக்ரோஷ அரசியலில் மேற்கு வங்க அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் தெரியாமல் அழிக்கப்பட்டது.
இப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்க்க காங்கிரஸ்க்கு குட்பை சொன்ன மம்தா தற்போது பாஜகவை எதிர்க்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
தனித்துவிடப்பட்ட மம்தா.. 20 எம்பிக்கள் கூண்டோடு பாஜகவுக்கு ஆதரவு.. திணறும் திரிணாமுல் -
சேலை குவியலுக்குள் புகுந்த திரிணாமுல் தலைவர்.. தட்டி தூக்கிய போலீஸ்.. அரங்கேறிய விசித்திர டிராமா!












Click it and Unblock the Notifications