ஆட்டோவுக்குள் கிடந்த உடல்.. கள்ளக்காதலனால் 4 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி.. அலறிய பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில், கணவரை இழந்த 4 குழந்தைகளுடன் வசித்து வந்த பெண் ஆட்டோவில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலன் அவரை கொன்று உடலை ஆட்டோவில் வீசிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் திலக் நகரில் நேற்று மாலையில் ஆட்டோ ஒன்று நின்றது. அந்த ஆட்டோவின் பின் இருக்கையில் போர்வையில் சுற்றப்பட்டு பெண் உடல் ஒன்று கிடந்தது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து அந்த ஆட்டோவில் இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். அப்போது அவரது தலையில் காயங்கள் இருந்தது.
இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். யாரோ அவரை அடித்து கொன்று உடலை ஆட்டோவில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சல்மா என்பதும், அவருக்கு 35 வயது என்பதும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி சல்மாவுக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் இறந்தும், சல்மா 4 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. இந்த சமயத்தில் தான் சல்மாவுக்கு சுப்பிரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
சல்மாவுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து சுப்பிரமணி உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நேற்று சல்மாவை, அவரது கள்ளக்காதலன் சுப்பிரமணி சந்தித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி கட்டையை எடுத்து சல்மாவின் தலையில் அடித்துள்ளார்.
இதில் சல்மா மயங்கி கீழே விழுந்து இறந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று அறியாத சுப்பிரமணி அருகே இருந்த ஆட்டோவின் பின் இருக்கையில் அவரது உடலை போர்வையால் சுற்றி போட்டுவிட்டு எஸ்கேப் ஆனது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுப்பிரமணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications