Bengaluru Boy Kidnap: பெங்களூரில் ரொம்ப காலத்திற்கு பிறகு ஒரு ஷாக்.. பள்ளி மாணவன் பணத்திற்காக கடத்தி கழுத்தறுத்து கொலை
பெங்களூர்: 90களில் பெங்களூரில் பணத்திற்காக பள்ளி மாணவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகம் நடந்திருந்தன. ஆனால், 90களின் இறுதியில் அதெல்லாம் முடிந்துவிட்டது. இப்படி என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பெங்களூரில் கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அரக்கரேயில் உள்ள வைஸ்யா வங்கி காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவர்தான் நிச்சித். இவர் கிறிஸ்ட் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் மாணவன், மாலையில் டியூஷனுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் திடீரென கடந்த புதன்கிழமை மாணவனை காணவில்லை. மாணவன் காணாமல் போனதை அடுத்து, அவரது தந்தை அச்சுதா ஜே.சி. அன்று இரவு 10.30 மணியளவில் ஹுலிமாவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலில் மாணவனின் சைக்கிள் சாந்திநிகேதன் லேஅவுட்டில் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி இருக்கையில், நேற்று பன்னர்கட்டா-கொட்டிகெரே சாலைக்கு அருகில் உள்ள பாறை நிறைந்த பகுதியில் மணவனின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
இதனையடுத்து ஹுலிமாவ் காவல் நிலைய காவல்துறையினர், கக்கலிப்புரா சாலைக்கு அருகே மறைந்திருந்த சந்தேக நபர்களை அடையாளம் கண்டுபிடிக்க முயன்றனர். இவர்கள் கோபிகிருஷ்ணா மற்றும் குருமூர்த்தி என அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இரவு சுமார் 1 மணியளவில், இன்ஸ்பெக்டர் குமாரசாமி பி.ஜி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்த் குமார் தலைமையிலான காவலர்கள் இவர்களைக் கைது செய்ய முயன்றனர்.
அப்போது, குற்றவாளிகள் காவல்துறையினரை கத்தியால் தாக்கியதாகவும், இதையடுத்து காவலர்கள் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாகவும் சொல்லப்படுகிறது. எவ்வளவு சொல்லியும் கேட்காத கடத்தல்காரர்கள், அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். எனவே அவர்களை காவலர்கள் சுட்டுள்ளனர். இதில் குருமூர்த்தி இரண்டு கால்களிலும், கோபிகிருஷ்ணா வலது காலிலும் காயமடைந்தனர். இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூரில் ஒரு காலத்தில் பணத்திற்காக பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் இருந்தன. ஆனால் காவல்துறையின் உறுதியான நடவடிக்கைக்கு பின்னர் இது முற்றிலும் இல்லாமல் ஆக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் இதே போன்ற சம்பவம் நடந்திருப்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications