பெங்களூரில் இளம் பெண்ணுக்கு கொடுமை.. கொள்ளையர்கள் அட்டூழியம்! இப்படி யாருக்கும் நடக்கக்கூடாது
பெங்களூர்: பெங்களூரில் வீடு புகுந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, வீட்டிலிருந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் மொத்தம் 5 பேர் ஈடுபட்ட நிலையில், மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெங்களூரு கிராமப்புறத்தில் உள்ள கங்கோண்டனஹள்ளி பகுதியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது வீட்டில் பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 9.15 மணிக்கு நடந்திருக்கிறது. வீட்டில் இருந்தவர்களைக் கதவைத் திறக்கச் சொல்லி, 5 நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அந்தச் சமயத்தில் வீட்டில் ஆறு பேர் இருந்துள்ளனர்.
நள்ளிரவு 12.30 மணிக்கு பாதிக்கப்பட்டவரின் மூத்த மகன் அளித்த புகாரின் பேரில், மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், "குற்றவாளிகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன், இரண்டு மொபைல் போன்களையும், 25,000 ரூபாயையும் திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் நடந்த வீட்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் (பாதிக்கப்பட்டவர்), மேலும் இரண்டு பெண்கள், இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் என மொத்தம் 6 பேர் இருந்திருக்கின்றனர்.
குற்றவாளிகளும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் நலமாக இருக்கிறார். குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே அறிமுகம் இருந்ததா என்பதை விசாரித்து வருகிறோம்" என்று பெங்களூர் ரூரல் காவல் கண்காணிப்பாளர் சி.கே. பாபா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளில் மூவர் கார்த்திக், க்ளென் மற்றும் சுயோக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மற்ற இரண்டு நபர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க, துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஒரு சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே வீடு புகுந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம், பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications