பெங்களூர் - ஓசூர் மெட்ரோ ரயில் சாத்தியமில்லை.. கைவிரித்த கர்நாடகா.. சொன்ன காரணத்தை பாருங்க
பெங்களூர்: கர்நாடகா - தமிழ்நாடு இடையே பெங்களூர் - ஓசூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவுப்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து அத்திபள்ளி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதனை பரிசீலனை செய்த பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பெங்களூர் - அத்திப்பள்ளி இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது. ஏனென்றால் இது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என கைவிரித்துள்ளது.
பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிப்பு செய்ய தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது. பெங்களூரில் ஐடி நிறுவனங்களும், ஓசூரில் பிற தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதனால் பெங்களூரில் இருந்து ஓசூருக்கும், ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கும் தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஓசூரில் தமிழக அரசு புதிய விமான நிலையத்தை அமைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் பெங்களூரில் இருந்து ஓசூருக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தினால் அது ஓசூரின் தொழில் வளர்ச்சிக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கும். இதனால் தமிழக அரசு பெங்களூர் - அத்திப்பள்ளி இடையே மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவதில் முனைப்பு காட்டி வருகிறது.
தற்போது பெங்களூரை எடுத்து கொண்டால் சல்லக்கட்டா முதல் ஓயிட்பீல்டு வரையும், மாதவராவில் இருந்து கனகபுரா ரோடு சில்க் ரோடு வரையும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சமீபத்தில் அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி பெங்களூர் ஆர்வி ரோடு முதல் பொம்மச்சந்திரா வரை மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதுதவிர பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை தமிழக - கர்நாடகா எல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஓசூர் - பெங்களூர் இடையே தினமும் பல லட்சம் பேர் பயணித்து வருகின்றனர்.
வேலை நிமித்தமாக அவர்கள் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் இயக்கப்பட்டால் அவர்கள் எளிதாக பயணிக்க முடியும் என்பதால் அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில் இயக்க வேண்டும் என்று தமிழகம், கர்நாடகா மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமானால் தென்னிந்தியாவில் இருமாநிலங்களுக்கு இடையே இயங்கும் முதல் மெட்ரோ ரயில் சேவை என்ற பெருமை கிடைக்கும். ஆனால் தற்போது இந்த திட்டம் தடையை எதிர்கொண்டுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) நிறுவனம் பெங்களூர் - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளது.
அதாவது மெட்ரோ ரயில் இயங்க மின்சாரம் தேவையாக உள்ளது. ஆனால் இருமாநிலங்களுக்கு இடையே வெவ்வேறு மின்சார அளவுகள் பயன்படுத்தப்பட்டு வருவதால் அது சாத்தியமில்லை என்று பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) சார்பில் 25 kV AC-யை பயன்படுத்தி பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் அதற்கு மறுத்துள்ளது.
பெங்களூரில் மெட்ரோ ரயில் 750 V DC-யில் இயங்கி வருகிறது. இதனால் இருமின்அளவு மாறுபாட்டில் மெட்ரோ ரயில் சேவையை இயக்குவது கடினம். தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என்று அறிவித்துள்ளது. இதனால் பெங்களூர் - ஓசூர் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications