பெங்களூரு மஞ்சு வீட்டு கிச்சனில் திடீர்னு வினோத சத்தம். எட்டிப் பார்த்தால் "அது" அசையாமல் கிடந்ததாம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில், விவசாயி ஒருவரின் வீட்டிற்குள் நாகப்பாம்பு புகுந்துவிட்டது.. அமைதியாக அங்கேயே சுருண்டு கிடந்த அந்தப் பாம்பைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.. வீட்டின் சமையல் அறையில் புகுந்த அந்த ஆபத்தான உயிரினத்தை, நிபுணர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் போராடி பிடித்திருக்கிறார்கள்.. அந்த விவரங்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள கலசா தாலுகா, எஸ்.கே.மேகல் கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சு.. இவருக்கு 49 வயதாகிறது.. விவசாயியான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கர்நாடகா மஞ்சு
நேற்றைய தினம் காலை மஞ்சுவின் குடும்பத்தினர் தங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது சமையல் அறையில் இருந்து ஒரு விசித்திரமான சத்தம் கேட்க, குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர்... அங்கே, சுருண்டு கிடந்த ஒரு பெரிய நாகப்பாம்பு, அந்த வீட்டின் கிச்சனில் வைக்கப்பட்டிருந்த ஐந்து நாட்டுக்கோழி முட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக விழுங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
முட்டைகளை முழுமையாக விழுங்கிய அந்த நாகப்பாம்பு, அங்கிருந்து நகராமல் அதே இடத்தில் அசையாமல் நின்றது. நாகப்பாம்பு முட்டைகளைச் சாப்பிடும் காட்சியை நேரில் கண்ட குடும்பத்தினர் நிலைகுலைந்து போயினர். உடனடியாக மஞ்சுவும் அவரது குடும்பத்தினரும் வீட்டிற்கு வெளியே ஓடிவந்து கிச்சன் கதவை மூடிவிட்டனர்.. பிறகு வனத்துறைக்கும் தகவல் தந்தனர்..
5 நாட்டுக்கோழி முட்டைகள்
அதற்குள் இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியதால், அக்கம்பக்கத்தினர் மஞ்சுவின் வீட்டில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... சிறிது நேரத்தில் கலசா வனத்துறை ஊழியர்கள் மற்றும் புகழ்பெற்ற பாம்பு பிடிக்கும் நிபுணர் 'ஸ்னேக் ரிஸ்வான்' ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வீட்டை சுற்றியிருந்த மக்களை, அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, கிச்சன் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.. முதலில் ரிஸ்வான் உள்ளே புகுந்தார்.. அப்போதும் அந்த நாகப்பாம்பு அசையாமல் கிடந்தது.. மிக கவனமாக அந்த நாகப்பாம்பை பிடிக்க தொடங்கினார்.
கிச்சனில் நாகப்பாம்பு
ஆனால், எவ்வளவு போராடியும் நாகப்பாம்பை பிடிக்க முடியவில்லை.. சுமார் 30 நிமிடங்கள் போராட்டத்திற்குப் பிறகு, லாவகமாகப் பாம்பின் தலையைப் பிடித்துக் கட்டுப்படுத்தினார்... ஆனால், 5 முட்டைகளை விழுங்கியதால் அந்த நாகப்பாம்பு சற்று மந்தமான நிலையில் இருந்ததால், ரிஸ்வான் அந்த பாம்பை எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்தார்.
பிடிபட்ட அந்த நாகப்பாம்பு உடனடியாக ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டுவிட்டு வந்தார்.. இதற்கு பிறகே மஞ்சு குடும்பத்தினர் நீண்ட பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்தனர்.
நாகப்பாம்புகளும், நாட்டுக்கோழி முட்டைகளும்
நாகப்பாம்புகள் பொதுவாக முட்டைகளை மிகவும் விரும்பி உண்ணக்கூடியவை என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஊர்வன வகையைச் சேர்ந்த பாம்புகளில், குறிப்பாக நாகப்பாம்புகள், பறவைகளின் முட்டைகளைதான் தேடி சென்று சாப்பிடுமாம்.. காரணம், இவற்றின் உடலமைப்பு முட்டைகளை எளிதாக விழுங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
முட்டையை விழுங்கிய பிறகு, நாகப்பாம்பின் வயிற்றில் உள்ள குறிப்பிட்ட அமிலத்தன்மை கொண்ட செரிமான மண்டலம், முட்டையின் ஓட்டை எளிதில் உடைத்து, உள்ளே இருக்கும் சத்துக்களை உறிஞ்சி, ஓடுகளை தன்னுள் செரிமானம் செய்து கொள்ளும் அல்லது சில நேரங்களில் சிறிய துண்டுகளாக வெளியேற்றிவிடுமாம்.
முட்டையின் ஓடு கால்சியம் சத்து நிறைந்தது என்பதால், பாம்புகள் தங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெறவும் இத்தகைய முட்டை வேட்டையில் ஈடுபடுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனால்தான், கிராமப்புறங்களில் வீட்டின் அருகே கோழிப்பண்ணைகள் அல்லது வீடுகளுக்குள் முட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை வாசனை மூலம் கண்டறியும் திறன் நாகப்பாம்புகளுக்கு அதிகம் உண்டு.
எனவே, மக்கள் தங்களது வீட்டின் சமையல் அறை அல்லது உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படும் இடங்களில் கூடுதல் எச்சரிக்கையுடனும், சுத்தமாகவும் வைத்துக்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்..!!












Click it and Unblock the Notifications