ஆர்சிபி கொண்டாட்டத்தை ஒத்திவைக்க எச்சரித்த போலீஸ்.. கேட்காத ஆர்சிபி நிர்வாகம்.. உண்மை என்ன?
பெங்களூர்: பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதல்நாள் இரவு முதல் ரசிகர்கள் உணர்வெழுச்சியுடன் இருந்த காரணத்தால், அது கொஞ்சம் குறைந்த பின் கொண்டாட்டங்களை நடத்தலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த சாதனையை கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய ரசிகர்கள் தற்போது சோகத்துடன் இருக்கிறார்கள். ஏனென்றால் சின்னச்சாமி மைதானத்தில் கூடிய ஆர்சிபி ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

ஆர்சிபி நிர்வாகிகள் கைது
இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. நீதிமன்ற விசாரணையில், கர்நாடகா மாநில அரசுக்கும், கர்நாடகா கிரிக்கெட் சங்கத்திற்கும் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ஆர்சிபி அணியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என்று சோசியல் மீடியாவில் குரல்கள் எழுந்துள்ளன.
காவல்துறை வார்னிங்
இந்த நிலையில் பிரபல பத்திரிகையான டெக்கான் ஹெரால்டு முக்கியமான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க் கிழமையன்று இரவே ஆர்சிபி அணி எந்த வகையான கொண்டாட்டத்திற்கும் திட்டமிட வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநில அரசிடமும் இதுதொடர்பாக அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
உணர்வெழுச்சியில் ரசிகர்கள்
ஏனென்றால் செவ்வாய்க் கிழமை இரவே ஆர்சிபி அணி ரசிகர்கள் காலை 5.30 மணி வரை சாலைகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் என்பதால், சற்று நிதானித்து கொண்டாட கூறியுள்ளனர். புதன் கிழமை அல்லாமல் ஞாயிற்றுக் கிழமை கொண்டாட்டங்களை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று யோசனை
ஆனால் ஆர்சிபி அணி நிர்வாகம் தரப்பில் வெளிநாட்டு வீரர்கள் புறப்பட்டுவிடுவார்கள் என்று காரணம் சொல்லப்பட்டுள்ளது. இதன்பின் ஆர்சிபி அணியினரின் வெற்றி பேரணி அல்லாமல் நேரடியாக மைதானத்தில் மட்டுமே கொண்டாட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் வெற்றி பேரணி இருக்கிறது என்று அறிவிக்கப்பட்ட பின், அதிகாலை முதலே ரசிகர்கள் சின்னச்சாமி மைதானம் பகுதியில் கூட தொடங்கி இருக்கிறார்கள்.
குவிந்த ரசிகர்கள்
இதனை கருத்தில் கொண்டே மதியம் 1 மணியளவில் வெற்றிப் பேரணி ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்சிபி ரசிகர்கள் விமான நிலையம் முதலே அணிவகுக்க தொடங்கிவிட்டனர். இதனால் இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் முன்னதாக எச்சரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications