திருப்பதியில் விஐபி தரிசனம் வேண்டுமா? இதை செய்யுங்க! மாணவிக்கு கைக்கொடுத்த 1000116 கோவிந்தா நாமம்
பெங்களூர்: 'கோவிந்தா' நாமத்தை 10 லட்சத்து 116 முறை எழுதி வந்த கர்நாடக மாணவிக்கு திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
தென்னிந்தியா மட்டுமல்லாது உலகமே வியந்து நோக்கும் கோயிலாக திருப்பதி இருக்கிறது. திருப்பதி கோயிலுக்கு சென்று வருவது என்பது ஏறத்தாழ அனைத்து இந்து குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது நடக்கும் தெய்வீக சடங்காகும். நல்ல விஷயம், மோசமான அனுபவம், எதிர்பார்ப்பு, காத்திருப்பு என அனைத்து உணர்வுப்பூர்வமான சூழல்களுக்கு முன்னும், பின்னும் திருப்பதிக்கு சென்று வருவது காலங்காலமாக இருந்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்வது என்பது திருவிழாவுக்கு செல்வதை போன்றது. அதற்கான தயாரிப்புகள் ஏறத்தாழ ஒரு வாரம் முன்பிருந்தே தொடங்கப்படும். உணவு, உப கோயில்களை பார்ப்பதற்கான திட்டமிடல், வேண்டுதல், வேண்டுதலுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள காசு, உறவினர்களை ஒருங்கிணைப்பது என பக்தி பரவச உணர்வோடு, இனம் புரியாத ஆன்ம மகிழ்ச்சியும் நம்மை ஆட்கொண்டுவிடும்.
இப்படி மகிழ்ச்சியில் திளைத்த கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கீர்த்தனா, 'கோவிந்தா' நாமத்தை 10 லட்சத்து 116 முறை எழுதியுள்ளார். இதற்காக இவருக்கும் இவருடைய குடும்பத்தினருக்கும் விஐபி பிரிவில் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதனை பக்தர்கள் வரவேற்றிருக்கிறார்கள். 'கோவிந்தா' நாமத்தை 10 லட்சத்து 116 முறை எழுதி வருபவர்களுக்கு விஐபி தரிசனம் அனுமதிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மாணவிக்கு விஐபி தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இனி வரும் நாட்களிலும், இப்படி எழுதி வருபவர்களுக்கு விஐபி தரிசனம் அனுமதிக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் கூறியிருக்கிறது.
பெருமாளுக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் அதில் ஆகச்சிறந்தது 'கோவிந்தா' நாமம்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. கலியுகத்தில் மனிதர்களை காக்க, மனித ரூபத்தில் பெருமாள் அவதரித்த பின்னணியில்தான் கோவிந்தா நாமம் உருவானதாக சொல்லப்படுகிறது. மனித உருவம் எடுத்ததால் பசியும், தாகமும் இயல்பாக தோன்றியிருக்கிறது. எனவே ஒரு பசுவை கொண்டு பசியையும், தாகத்தையும் போக்கிக்கொள்ள பெருமாள் முடிவெடுத்திருக்கிறார்.
பசுவை தேடி முனிவர் அகத்தியரின் ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் முனிவரோ, ஜோடியாக வந்தால்தான் பசு என சொல்லிவிட, மகாலட்சுமியுடன் சேர்ந்து வந்து பசுவை வாங்க முயன்றிருக்கிறார் திருமால். அந்த நேரமாக பார்த்து முனிவர் ஆசிரமத்தில் இல்லாமல் போக திருமாலும், மகாலட்சுமியும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
கிளம்பும் நேரத்தில் வந்த முனிவர் பசுவை பிடித்துக்கொண்டு திருமால் பின்னாடியே ஓடியிருக்கிறார். அப்படி போகும் போது 'கோவு இந்தா' என தெலுங்கில் கூறியிருக்கிறார். அதாவது பசு இந்தா என்று இதன் பொருள். இதுவே திரிந்து கோவிந்தா என மாறியிருக்கிறது. திருமாலை வழிபட பக்தர்கள் இந்த நாமத்தையே பயன்படுத்த தொடங்கினர் என புராணங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications