சிபிஎம் ஆதரவு கொடுக்கலன்னா.. விஜய் பதவியேற்பு விழாவே நடந்து இருக்காது.. பெ சண்முகம் சரவெடி பேச்சு
சென்னை: திமுக கூட்டணி கட்சிகளின் தயவால்தால் தவெக ஆட்சி நீடிப்பதாக தவெக விமர்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய், மக்கள் தயவால் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம், தவெகவுக்கு நாங்கள் ஆதரவு தராமல் இருந்து இருந்தால், 10ம் தேதி பதவியேற்பு விழாவே நடந்து இருக்காது" என்று கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. தனிப்பெரும் கட்சியாக தவெக வென்ற போதிலும் அக்கட்சியால் ஆட்சி அமைக்க தேவைப்படும் எண்கள் கிடைக்காமல் போனது. இதையடுத்து, திமுக கூட்டணியில் அங்கம் பெற்று வென்ற கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தன. இதில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றன. இதர கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றன.

பெ சண்முகம் பேச்சு
தவெக ஆட்சி அமைக்க திமுக கூட்டணி கட்சிகளின் தயவே இருப்பதாக திமுக விமர்சனம் செய்து வருகிறது. இந்த விமர்சனத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலடி கொடுத்தார். மக்கள் தயவால் தவெக ஆட்சி நடைபெறுவதாக விஜய் பேசியிருந்தார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பெ.சண்முகம் கூறியதாவது:-
நாங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காகத்தான் வெளியில் இருந்து ஆதரவு என்பதை பகிரங்கமாக, வெளிப்படையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தெரிவித்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும். அதற்கான வாய்ப்பு தவெகவுக்குத்தான் இருக்கிறது. ஏனெனில், அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக தவெகதான் உள்ளது. சட்டப்படியும் அவர்களுக்குத்தான் வாய்ப்பு.
நாங்கள் ஆதரவு அளிக்காமல் போயிருந்தால்..
ஒரு வேளை நாங்கள் ஆதரவு அளிக்காமல் போனால் அன்று இருந்த சூழலில் மே 8, 9 சூழலில் 10 ஆம் தேதி பதவியேற்பு எனபதே நடந்து இருக்காது. அதற்கு மாறாக 10 ஆம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் குடியரசுத்தலைவர் ஆட்சி என்பது இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும். பாஜக இங்கே காலூன்றக்கூடாது என்பதற்காகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் போராட்டத்தை நீடித்து நடத்தி வந்து இருக்கிறோம்.
அப்படி இருக்கும் போது மறைமுகமாக குடியரசுத்தலைவர் ஆட்சி என்பதை எங்களால் ஏற்க முடியாது. ஆகவே அதை தடுப்பது என்ற நோக்கத்திற்கு தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பது என்ற முடிவை எடுத்தோம். ஆகவே அது எங்களுடைய அரசியல் நிலைப்பாடு. முதல்வர் என்ன சொன்னார் என்பதை பார்த்துவிட்டு பிறகு பதிலளிப்போம்.
முதல்வர் விஜய் பேசியது என்ன?
தமிழக சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய முதல்வர் விஜய் பேசியதாவது:- அவுங்க தயவால் ( திமுக) இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள், மக்கள் தயவால் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளின் ஆதரவால் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. நாங்கள்தான் அனுப்பி வச்சோம். நாங்கள்தான் அனுப்பி வச்சோம் என்கிறார்களே.. அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் ஏன் கதறுகிறீர்கள்..
நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்றால்
ஏன் இவ்வளவு கோபம்.. ஏன் இவ்வளவு கதறல்ஸ்.. இதுல இன்னொரு முக்கியமான விஷயம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையாக எடுத்த முடிவு என்று சொல்கிறார்கள். அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையாக எடுத்த முடிவு என்று சொல்கிறார்கள். இதுல எங்க இருந்து எங்க இருந்து... நாங்கள்தான் அனுப்பி வைத்தோம்.. நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்றால் புரியவில்லையே.. மக்களுக்கு நன்றாக புரியும். எல்லாவற்றையும் தெளிவாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்" இவ்வாறு முதல்வர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார். முதல்வர் விஜய் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போதே, எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.















Click it and Unblock the Notifications