இதென்ன பிரமாதம்.. டின்னரையே முடிச்சிடலாம்..டிராபிக்கில் நின்ற நேரத்தில் "லஞ்ச்" முடித்த பஸ் டிரைவர்
பெங்களூர்: பெங்களூரில் பேருந்து ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிக்னலுக்காக காத்திருந்த நேரத்தில் மதிய உணவையே சாப்பிட்டு முடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. பெங்களூரு டிராபிக்கில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்ற ரீதியில் நெட்டிசன்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். இங்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஐடி நிறுவனங்களும் குவிந்து கிடக்கின்றன. பெங்களூர் நகரம் ஐடி துறைக்கு எப்படி பெயர் போனதோ அதே போல போக்குவரத்து நெரிசலுக்கும் பெயர் பெற்றது. உலக அளவில் டிராபிக் அதிகம் உள்ள 2-வது நகரமாக பெங்களூர் தான் உள்ளது.

இந்தியாவில் அதிகம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமும் பெங்களூர் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும் சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு வீடியோ, இந்த டிராபிக்கால் வாகன ஓட்டிகள் தினமும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதை காட்டும் வகையில் அமைந்துள்ளது.
பெங்களூரை பொறுத்தவரை நாள் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
அதுவும் பீக் நேரங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை பற்றி சொல்லவே வேணாம். அந்த அளவுக்கு கார்களும் பைக்குகளுமாக வரிசை கட்டி சாலையில் நிற்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வாகனங்கள் சாரைசாரையாக அணிவகுத்து நிற்பதை காண முடியும். இந்த நிலையில், பெங்களூரின் சில்க் ரோடு சந்திப்பில் டிராபிக்கில் சிக்கியிருந்த ஒரு பேருந்து ஓட்டுநர், டிரைவர் சீட்டில் இருந்தபடியே தனது லஞ்சை சாப்பிட ஆரம்பித்து விட்டார்.
டிராபிக் குறைந்து வண்டிகள் கிளம்புவதற்கு முன்பாகவே தனது லஞ்சையும் முடித்து விட்டார். சக வாகன ஓட்டி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் சந்த் பயவரபு என்பவர் தனது இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பெங்களூரில் உள்ள டிராபிக் நிலையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாகவும் சிலர் ஓட்டுநரின் பரிதாப நிலை குறித்தும் பதிவிட்டுள்ளனர்.

நெட்டிசன் ஒருவர் கூறுகையில், பெங்களூரில் இந்த ஒரு இடத்தில் மட்டும் இப்படி இல்லை. பல முக்கிய சந்திப்புகளில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது" எனபதிவிட்டு இருக்கிறார். அதேபோல் மற்றொரு நெட்டிசன் கூறும் போது, நேர மேலாண்மையை சரியாக அந்த ஓட்டுநர் பயன்படுத்துகிறார் என ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "சிலர் மூவிக்களையே பார்த்து முடிவதை பார்த்து இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறும் போது, "லஞ்ச் மட்டும் இல்லை டின்னரை கூட முடித்து விடலாம் அந்த அளவுக்கு பெங்களுரில் போக்குவரத்து நெரிசல் உள்ளது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications