பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் மின்சாரம் துண்டிப்பு.. பாதுகாப்பு குறைபாடால் அதிரடி.. என்ன நடந்தது?
பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய மின்வாரியம் கூறியது. அதற்கு காலஅவகாசமும் வழங்கியது. ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் மைதானத்துக்கான மின்சாரம் அதிரடியாக துண்டிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 18 வது சீசனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து பெங்களூரில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது பல லட்சம் ரசிகர்கள் கூடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்தனர் இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தினர், ஆர்சிபி அணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து தற்போது பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து மைதானத்தில் ரசிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு கண்டறியப்பட்டது. இதனை சரிசெய்ய தீ தடுப்பு மற்றும் அவசர சேவையின் டிஜிபி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கர்நாடகா கிரிக்கெட் சங்கத்துக்கு ஜூன் 10ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் கர்நாடகா கிரிக்கெட் சங்க நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மீண்டும் ஜூன் 20ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்போது 15 நாட்கள் காலஅவகாசம் கோரப்பட்டது. பெங்களூர் மின்வாரியம் 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியது. இந்த காலஅவகாசம் கடந்த 28 ம் தேதி முடிவுக்கு வந்தது. ஆனாலும் கூட சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் சரிசெய்யப்படவில்லை. இதையடுத்து நேற்று முதல் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா தீ மற்றும் அவசர சேவையின் டிஜிபி உத்தரவின்பேரில் பெங்களூர் மின்சாரம் விநியோக கம்பெனியான பெஸ்சார் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூர் சிவாஜிநகர் சப் டிவிஷன் அலுவலகத்தின் அதிகாரி கூறுகையில், ‛‛சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய டிஜிபி உத்தரவிட்டார். ஆனால் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் அதனை செய்யவில்லை. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
அதேபோல் ‛பெஸ்காம்' மின்வாரியத்தின் இன்ஜினியர் கூறுகையில், ‛‛கிரிக்கெட் மைதானத்தில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பாக ஜூன் 20ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கர்நாடகா கிரிக்கெட் சங்கம் 15 நாட்கள் அவகாசம் கோரியது. 7 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இதனால் திங்கட்கிழமை காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது'' என்றார். இதனால் தற்போது பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் மின்சாரம் இன்றி இரவில் இருட்டில் மூழ்கி உள்ளது.












Click it and Unblock the Notifications