பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்களை வெளியிட்டது பாஜகவா? பழி தீர்த்தது புட்டசாமி கவுடா குடும்பமா?
பெங்களூர்: ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3000 ஆபாச வீடியோக்களை ரிலீஸ் செய்தது யார் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். ஹாசனில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக தொகுதி முழுவதும் பென் டிரைவ்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவின் 3000-க்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் இடம் பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது ஜேடிஎஸ் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. கர்நாடகா அரசின் எஸ்ஐடி குழு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார் என்ற விவாதம் பெரும் மோதலாக வெடித்துள்ளது. பிரஜ்வலின் டிரைவராக இருந்த கார்த்திக்தான் இத்தனை சம்பவங்களின் மூளையாக இருந்துள்ளார். 15 ஆண்டுகள் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஓட்டுநராக இருந்தவர் கார்த்திக். நிலப் பிரச்சனையில் பிரஜ்வலுடன் மோதல் ஏற்பட தம் வசம் இருந்த ஆபாச வீடியோக்கள் பென்டிரைவ்வை ஆயுதமாக்கிக் கொண்டார்.
இது தொடர்பாக கார்த்திக் வெளியிட்ட வீடியோ பதிவில், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச படங்கள் அடங்கிய பென் டிரைவ்வை நான் பாஜகவின் தேவேராஜ் கவுடாவிடம்தான் கொடுத்தேன். அவர் 2003-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஹாசனில் ரேவண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரைத் தவிர வேறு யாரிடமும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரிடம் கூட இந்த வீடியோக்களை நான் தரவே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தேவேராஜ் கவுடாவோ, கார்த்திக்தான் ஹாசன் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் பட்டேல் கவுடாவுடன் நெருக்கமாக இருந்தார். பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்கள் வெளியானதில் அரசியல் ஆதாயம் அடையக் கூடிய ஒரே நபரும் ஸ்ரேயாஸ் பட்டேல்தான். ஜேடிஎஸ் அல்லது பாஜகவை சேர்ந்த ஒருவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளருக்கு எதிராகவே ஆபாச வீடியோக்களை கசியவிடுவார்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
1980களில் இருந்தே தேவகவுடா குடும்பத்தை கடுமையாக எதிர்ப்பது புட்டசாமி கவுடா குடும்பம். லோக்சபா தேர்தலில் தேவகவுடாவையே தோற்கடித்தவர் புட்டசாமி. இதன் பின்னர் 2-வது தலைமுறையாக தேவகவுடா மகன் ரேவண்ணாவை எதிர்த்து புட்டசாமி கவுடா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ரேவண்ணாவை புட்டசாமி கவுடா மருமகள் அனுபமா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது 3-வது தலைமுறையாக ஹாசனில் தேவகவுடா பேரன் பிரஜ்வலை எதிர்த்து புட்டசாமி கவுடா பேரன் ஸ்ரேயாஸ் பட்டேல் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications