பாஜக VS காங்கிரஸ்.. கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்? டிவி 9-சிவோட்டர் சர்வே ரிசல்ட் இதுதான்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் இந்த முறை எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் தனி மெஜாரிட்டியுடன் அக்கட்சி ஆட்சியை பிடிக்கும்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. மாறாக தற்பாதைய ஆட்சியை அப்படியே தக்க வைக்க வேண்டும் என பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது டிவி 9 கன்னடா மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி மாநிலத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என அதிகமானவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 37.8 சதவீதம் பேர் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
மாறாக பாஜக தான் தற்போதைய ஆட்சியை தக்கவைக்கும் என 36 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவுக்கு ஆதரவு என்பது 1.8 சதவீதம் குறைவாக உள்ளது. இதன்மூலம் கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அதிகமானவர்களின் எதிர்பார்ப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே உள்ளது.
மேலும் இந்த கருத்து கணிப்பில் 13 சதவீதம் பேர் ஜேடிஎஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ளனர். ஆனால் ஜேடிஎஸ் கட்சியை பொறுத்தமட்டில் அங்கு அதிகபட்சமாக 35 இடங்களில் மட்டுமே ஜெயிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர காங்கிரஸ் +ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றும் என 6.2 சதவீதம் பேரும், ஜேடிஎஸ் மற்றும் பாஜக இணைந்து மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என 7.1 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications