கர்நாடகாவில் பாஜக இளைஞரணி நிர்வாகி படுகொலை.. விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்.. பெரும் பதற்றம்
பெங்களூரூ: கர்நாடக மாநிலத்தில் பாஜக வாலிபர் அமைப்பை சார்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினர் முழு அடைப்பு நடத்த உள்ளூர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தட்சிண கன்னடம் மாவட்டத்தின் பெல்லாரே கிராமத்தில் நேற்றிரவு பிரவீன் நெட்டாறு எனும் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இவர் பாஜகவின் வாலிபர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா சங்கத்தின் உறுப்பினராவார். கோழிக்கடையை நடத்தி வரும் இவர், நேற்றிரவு தனது கடையை மூடிவிட்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளார்.

கொலை
அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் பிரவீன் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த பிரவீனை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பிரவீன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

எப்படி நடந்தது?
32 வயதான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா சங்கத்தின் உறுப்பினர் பிரவீனின் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் சங்கத்தினர் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர். இந்த கொலைக்கு பின்னால் பாப்புலர் ஃப்ரன்ட்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ இருப்பதாக வலதுசாரி அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

யார்?
இந்த சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டார்கள் என்றும் அவர்கள் கேரளா பதிவு எண்ணை கொண்ட பைக்குகளை பயன்படுத்தியுள்ளனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அம்மாவட்ட காவல்துறை அதிகாரி ருஷிகேஷ் சோனாய் தெரிவித்துள்ளார். சிசிடிவி மூலம் குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கு பின்னால் இருப்பவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

போராட்டம்
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று குழுக்கள் கேரளாவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் நடந்த பகுதி கேரளாவுக்கு அருகில் இருப்பதாகவும், எனவே கேரள மாநில காவல்துறை உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஞானேந்திரா வலியுறுத்தியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அப்பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக சில பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications