பாஜக மேலிடத்திடம் பேசி.. சாதித்தே விட்டாரே எடியூரப்பா.. 7 அமைச்சர்களுடன் அமைச்சரவை விஸ்தரிப்பு
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று மாலை, தனது அமைச்சரவையை மாற்றியமைத்தார். 7 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதன் மூலம், பாஜகவிற்குள் எடியூரப்பாவின் கை ஓங்கியிருப்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகியுள்ளது. வயதை காரணம் காட்டி எடியூரப்பா முதல்வர் பதவியை பாஜக மேலிடம் பறித்துவிடும், அமைச்சரவை விரிவாக்கம், செய்ய எடியூரப்பாவுக்கு பாஜக மேலிடம் அனுமதிக்காது என்றெல்லாம் கடந்த சில மாதங்களாக தகவல் பரவியது.
ஆனால், மேலிடத்தை சமாதானம் செய்து அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் பெறுவதில் எடியூரப்பா சாதித்துவிட்டார்.

எடியூரப்பா பதவி
டெல்லியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் கூறுகையில், "மக்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ள, எடியூரப்பா பதவியின் மீது கை வைப்பது தேன் கூட்டின் மீது கை வைப்பதை போன்றது. எனவே அதெல்லாம் வதந்திகள்தான். அமைச்சரவை விரிவாக்கம் நடக்கப்போவது இதற்கு ஒரு நல்ல சாட்சி" என்கிறார்.

அமைச்சர்கள் யார்?
எடியூரப்பா தனது அமைச்சரவையில், காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்டிபி நாகராஜ், சங்கர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளார். இது தவிர, முருகேஷ் நிராணி, உமேஷ் கத்தி, அன்கரா, அரவிந்த் லிம்பாவளி, சி.பி.யோகேஷ்வர் போன்ற மூத்த மற்றும் தனக்கு நெருக்கமான பாஜக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். இதில் பலரும் ஏற்கனவே முந்தைய எடியூரப்பா ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள்தான்.

சுயேச்சைக்கு கல்தா
கலால்துறை அமைச்சராக உள்ள சுயேச்சை எம்எல்ஏவான நாகேஷை அமைச்சரவையிலிருந்து எடியூரப்பா நீக்கியுள்ளார். இப்போது சுயேச்சை ஆதரவு பாஜக ஆட்சிக்கு தேவையில்லை. இடைத் தேர்தல் வெற்றிகளலால், தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்டது. எனவே சுயேச்சைக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

சவால் காத்திருக்கிறது
அதேநேரம், அமைச்சரவையில் இடம் கிடைக்காத எம்எல்ஏக்கள், எடியூரப்பாவுக்கு எதிராக லாபி செய்வார்கள். அதை சமாளிப்பதுதான் 2023 சட்டசபை தேர்தல் வரை, எடியூரப்பாவுக்கு சவாலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications