கர்நாடகா: காவிரியில் 70,000 கன அடிநீரை திறந்துவிட்டது கர்நாடகா- ஒகேனக்கல்லில் சீறிப் பாயும் வெள்ளம்!
பெங்களூர்: கர்நாடகாவின் கபினி அணை மற்றும் நுகு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 70,000 கன அடிநீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் கனமழை பெய்வதால் கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 65,000 கன அடிநீரும் நுகு அணையில் இருந்து 5,000 கன அடி நீரும் காவிரியில் திறந்துவிடப்படுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் ஒகேனக்கல்லில் பெரும் வெள்ளம் சீறிப் பாய்கிறது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகாவின் அணைகளும் நிரம்பி உள்ளன.

கேரளாவின் வயநாட்டில் கபிலா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெருமழை தொடர்ந்து கொட்டித் தீர்க்கிறது. கபிலா ஆறு என்பது காவிரியின் கிளை நதி. கபிலா ஆற்று நீர் கர்நாடகாவின் கபினி அணையை வந்தடைகிறது. கபினி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளவை எட்டிவிட்டது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.
கபினி அணையில் இருந்து மட்டும் தற்போது வினாடிக்கு 65,000 கன அடிநீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கபினி அணையின் கீழ் அணையான நுகு அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தமாக காவிரியில் 70,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் ஒகேனக்கல்லில் பாறைகளை மறைக்கும் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஒகேனக்கல்லில் 4-வது நாளாக பரிசல்களும் இயக்கப்படவில்லை. காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications