2,000 அமைப்புகள் ஆதரவு.. 29ம் தேதி பந்த்தால் மொத்தமாக முடங்கும் கர்நாடகா! வாட்டாள் நாகராஜ் வார்னிங்
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 29ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்பட உள்ளது. இந்த பந்த்துக்கு வெவ்வேறு சங்கம் உள்பட மொத்தம் 2000 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அன்றைய தினம் என்ன நடக்கும்? என்பது பற்றி வாட்டாள் நாகராஜ் விளக்கமளித்து போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து பெங்களூரில் இன்று பந்த் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் ஆதரவு அளிக்கவில்லை.

இருப்பினும் பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையை திடீரென முற்றுகையிட முயன்றதால் வாட்டாள் நாகராஜ் உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக வாட்டாள் நாகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு எந்த காரணத்தை கொண்டும் தண்ணீர் திறந்து விடக்கூடாது. இன்று பெங்களூரில் பந்த் நடந்துள்ளது. நாங்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டோம். எங்கள் போராட்டம் தனித்துவமானது. அகண்ட கர்நாடகா பந்த்தை நாங்கள் நடத்த உள்ளோம். அது வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தை ஒரு அடி தண்ணீரை கூட விடக்கூடாது. தண்ணீர் திறந்து விட்டால் கர்நாடகா முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். சிறை நிரப்புரம் போராட்டமும் நடத்தப்படும். வரும் 29ம் தேதி நடக்கும் போராட்டத்துக்கு 2 ஆயிரம் கன்னட அமைப்பினர் ஆதரவு வழங்க உள்ளனர். ஒவ்வொரு மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அன்றைய தினம் தியேட்டர்கள் மூடப்படும். சூட்டிங் ரத்து செய்யப்படும். ஹோட்டல் மூடப்படும். போக்குவரத்து முடங்கும். விமான நிலையம் முற்றுகையிடப்படும். இன்றைய தினம் பெங்களூர் பந்த் போராட்டத்தை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனை தீவிரமாக கண்டிக்கிறேன்.
இது போலீஸ் மாநிலம். இருந்தாலும் போலீசார் போராட்டத்துக்கு தொல்லை தரக்கூடாது. குண்டர்கள் போல் நடக்கக்கூடாது. இது தொடர்ந்தால் தீவிர போராட்டம் நடத்தப்படும். மேலும் 29ம் தேதி நடத்தும் போராட்டத்துக்கு போலீசார் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது. அந்த பந்த் போராட்டத்தில் மொத்தம் 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்பட உள்ளது'' என்றார்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் பந்த் நடந்து முடிந்துள்ளது. பெங்களூரில் உள்ள கர்நாடகா ஜல சம்ரக்சன வேதிகே சார்பில் 100க்கும் அதிகமான அமைப்பினர் பந்த் நடத்தி வருகின்றனர். அரசு பஸ்கள் இயங்கினாலும் கூட மக்கள் நடமாட்டம் என்பது வழக்கம்போல் இல்லை. மிக குறைந்த அளவில் மட்டுமே மக்கள் நடமாடி வருகின்றனர்.
இந்த பந்த்துக்கு வாட்டாள் நாகராஜூவிடம் ஆதரவு கோரப்பட்டது. ஆனால் அவர் ஆதரவு வழங்கவில்லை. வரும் 29ம் தேதி கன்னட அமைப்பு சார்பில் கர்நாடகா முழுவதும் பந்த் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் தான் இன்று வாட்டாள் நாகராஜ் இப்படி பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications