உக்கிரமான காவிரி போராட்டம்.. பெங்களூரில் தொடங்கிய பந்த்! கன்னட அமைப்பினர் கைது - தற்கொலை முயற்சி
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. இந்த பந்த் மாலை 6 மணி வரை நடைபெற்று வரும் நிலையில் கன்னட அமைப்பினர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பெங்களூர் நகரில் பஸ்கள் இயங்கினாலும் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் பூதாகரமாகி உள்ளது. கர்நாடகாவில் குடிக்க தண்ணீர் இல்லை எனக்கூறி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க அங்குள்ள விவசாய, கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீற முடியாமல் கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதனை கண்டித்து கேஆர்எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பந்த் நடந்தது.
இதையடுத்து இன்று பெங்களூரில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக ஜல ரக்சனா சமீதி(கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு) சார்பில் இந்த பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பந்த் நடக்கிறது. இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 100க்கும் அதிகமான அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்றைய பந்த்துக்கு ஆம்ஆத்மி, பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் முழு ஆதரவு வழங்கி உள்ளன.
இதனால் பெங்களூர் நகர் இன்று முடங்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. ஆனால் கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து வரும் 29 ம் தேதி கர்நாடகா முழுதும் பந்த் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இதனால் சில அமைப்புகள் இன்றைய தினம் நடக்கும் பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்று வரும் 29 ம் தேதி நடக்கும் கர்நாடகா பந்த்துக்கு ஆதரவு வழங்குவதாக மாற்றி தெரிவித்துள்ளன.
இதனால் பெங்களூரில் இன்று அமைதியான முறையில் பந்த் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. பந்த்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில் பெங்களூர் டவுன்ஹாலில் போராட்டம் நடத்த முயன்ற கன்னட அமைப்பினரை கைது செய்தனர். அதேபோல் பசவனகுடியில் போராட்டம் நடத்திய ஆட்டோ டிரைவரை குண்டு கட்டாக கைது செய்தனர்.
பெங்களூரை பொறுத்தமட்டில் சுதந்திர பூங்காவில் மட்டும் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பந்த்தில் கலந்து கொள்ளும் அமைப்பினர் பேரணியாக சுதந்திர பூங்காவுக்கு வர உள்ளனர். பந்த் அறிவித்த குருபூர் சாந்தகுமார் குழுவினர் டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு ஊர்வலமாக வர உள்ளனர். இதற்கிடையே இன்று காலையில் விவசாயி ஒருவர் தனது துண்டை பயன்படுத்தி மரத்தில் தூக்குப்போட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டனர்.
பந்த்துக்கு அழைப்பு விடுத்தவர்கள் மட்டுமே தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றபடி பொதுமக்களுக்கு எந்த தொல்லையும் ஏற்படவில்லை. இருப்பினும் பல மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறாமல் உள்ளனர். இதனால் பஸ் நிலையங்களில் கர்நாடகா அரசு பஸ்கள் இயங்கினாலும் கூட பயணிகள் இல்லாத நிலை உள்ளது.
மேலும் மெட்ரோ ரயில் சேவையும் தடையின்றி இயக்கப்பட உள்ளது. மேலும் கடைகள், ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் இயங்கி வருகின்றன. ஆனால் மக்கள் வரத்து என்பது குறைந்த அளவில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க முன்னெச்சரிக்கையாக அரசு-தனியார் பள்ளி-கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான பஸ் சேவை என்பது நேற்று இரவு முதல் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் சென்ற பஸ்கள் எல்லைப்பகுதியான ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சரக்கு வாகனங்களும் அங்கு தற்காலிகாக அணிவகுத்து நிற்கின்றன.
மேலும் பெங்களூரில் பந்த் நடத்த அனுமதியில்லை எனக்கூறி பெங்களூர் மாநகர போலீசார் 144 தடை உத்தரவு வழங்கி உள்ளனர். ஆனாலும் பந்த் அறிவித்த அமைப்பினர் அதனை மீறி பந்த்தை தொடங்கி உள்ளனர். இந்த் பந்த் என்பது 100 சதவீதம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாலும் 50 சதவீதம் அளவுக்கு வெற்றி பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications