வன்முறை இல்லை.. பெங்களூரில் அமைதியாக நடக்கும் பந்த்.. களநிலவரம் என்ன தெரியுமா? 5 முக்கிய காரணம்
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு பந்த் தொடங்கிய நிலையில் காலை 8.30 மணி வரை எந்த வன்முறையும் இன்றி அமைதியான முறையில் பந்த் நடந்து வரும் நிலையில் அதன் பின்னணியில் உள்ள 5 முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கர்நாடகா அரசு சார்பில் தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து இன்று பெங்களூரில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ஜல சம்ரக்சன சமிதி தலைமையில் பெங்களூர் பந்த் நடப்பதாக கரும்பு விவசாயிகள் அமைப்பின் தலைவர் குருபூர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. காலை 8.30 மணி நிலவரப்படி அதிர்ஷ்டவசமாக பெங்களூரில் எந்த வன்முறையும் ஏற்படவில்லை. பந்த் என்பது அமைதியான முறையில் நடந்து வருகிறது. அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டு பஸ்கள் மட்டும் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் பெங்களூரில் பந்த் அமைதியாக நடப்பதன் பின்னணியில் உள்ள 5 முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
முதல் காரணம்: பெங்களூரில் பந்த் போராட்டத்தை அறிவித்த கர்நாடகா ஜல சம்ரக்சன் சமிதி மற்றும் கர்நாடகா கரும்பு விவசாயிகள் தலைவர் குருபூர் சாந்தகுமார் கன்னட அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. இதனால் கர்நாடகாவில் பந்த் நடத்துவதில் பெயர் பெற்ற வாட்டாள் நாகராஜ், கர்நாடகா ரக்சன வேதிகே உள்ளிட்ட பல முக்கிய கன்னட அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் இந்த பந்த் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை.
2வது காரணம்: வாட்டாள் நாகராஜ் வரும் 29ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடத்துவதாக அறிவித்துள்ளார். இதனால் இன்றைய பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பல அமைப்பினர் கடைசி நேரத்தில் பின்வாங்கி உள்ளனர். அவர்கள் வாட்டாள் நாகராஜ் நடத்தும் கர்நாடகா பந்த்க்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால் இன்றைய பந்த் போராட்டத்துக்கு பெரிய அளவில் சப்போர்ட் கிடைக்கவில்லை.
3வது காரணம்: பெங்களூர் நகரில் பந்த் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா அனுமதி கொடுக்கவில்லை. அதோடு நேற்று நள்ளிரவில் இருந்து இன்று நள்ளிரவு வரை பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் பந்த் போராட்டத்தில் பங்கேற்பதில் பலர் ஆர்வம் காட்டவில்லை.
4வது காரணம்: காவிரி தொடர்பாக பெங்களூர் நகரில் பந்த் நடத்தப்படும்போது சில இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட வரலாறு உள்ளது. இதனால் இன்று காலையில் மக்கள் நடமாட்டம் என்பது முற்றிலுமாக குறைந்தது. மேலும் தற்போது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் ரோந்து வாகனத்தில் கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற முன்கூட்டியே பெங்களூர் மாநகர போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதேபோல் குறிப்பிட்ட அமைப்புகளுக்கு அவர்கள் அட்வைசும் தெரிவித்துள்ளனர். இந்த செயல்பாட்டால் இன்றைய பந்த் என்பது அமைதியாகவே நடந்து வருகிறது.
5வது காரணம்: மேலும் இன்றைய பெங்களூர் பந்த்தில் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் இன்று மற்றும் வரும் 29ம் தேதி பந்த் காரணமாக ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளை அடைத்தால் வருமானம் பாதிக்கும். இதனால் அந்த சங்கத்தில் மொத்தமாக கர்நாடகா பந்த் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து இன்று ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள், கடைகள் திறந்துள்ளன. அதனை மூட சொல்லும் அளவுக்கு இன்றைய பந்த் போராட்டத்தை நடத்தும் கன்னட அமைப்பினர் வலுவாக இல்லை. இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.












Click it and Unblock the Notifications