வெறும் 600 மீட்டர்தான்.. அரபிக் கடலில் தேடுங்கள்.. சித்தார்த் மாயத்தில் போலீசுக்கு பெரும் சிக்கல்
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் ஒருவேளை அரபிக்கடலில் அடித்து செல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
பெங்களூர்: சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் ஒருவேளை அரபிக்கடலில் அடித்து செல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போன சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தியா முழுக்க பல்வேறு கிளைகளை கொண்டு சிசிடி வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
ஆனால் இத்தனை இருந்தும் சிசிடி தற்போது நிறுவனர் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று மாலை மாயமான சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் இப்போது வரை எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

தண்ணீர்
இவர் நேற்று மாலை மங்களூர் அருகே இருக்கும் ஜெப்பினா மோகரூ பகுதியில் உள்ள உல்லால் பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்கிறார்கள். சில நேரடி சாட்சியங்களும் இதைத்தான் சொல்கிறது.

கடல்
இவர் விழுந்ததாக சந்தேகிக்கப்படும் ஜெப்பினா மோகரூ பகுதியில் உள்ள உல்லால் பாலத்தின் ஓடிக்கொண்டு இருக்கும் ஆறு நேத்ராவதி ஆறு ஆகும்.இந்த ஆறு மங்களூரு வழியாக சென்று அப்படியே கடலில் கலக்கிறது. இந்த பாலத்திற்கும் அரபிக் கடலுக்கும் இடையில் வெறும் 600 மீட்டர்தான் இருக்கிறது.

என்ன வாய்ப்பு
ஒருவேளை சித்தார்த் நேத்ராவதி ஆற்றில் விழுந்து இருந்தால், நேரடியாக அரபிக் கடலில் அடித்து செல்லப்பட்டு இருப்பார். ஆம் வெறும் 600 மீட்டர்தான் தூரம் என்பதால் நேற்று இரவே அவர் கடலில் அடித்து செல்லப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது நேத்ராவதி ஆற்றில் மட்டுமே போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

மழை
தற்போது மங்களூரில் மிக மோசமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றை தாண்டி கடலில் கலக்கும் கழிமுகம் பகுதியில் போலீசாரால் தேடுதல் வேட்டையை நடத்த முடியவில்லை. கடலிலும் அதீத அலை காரணமாக, தேடுதல் பணியை தொடங்க முடியவில்லை. இது சித்தார்த்தை கண்டுபிடிப்பதில் போலீசுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications