பூரிக்குதே தேசம்.. நிலாவை "முத்தமிட்ட" இந்தியா.. தேசிய கொடியை வேக வேகமாக அசைத்த பிரதமர் மோடி
பெங்களூர்: நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், பிரதமர் மோடி 2 கைகளையும் தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்.
நொடிக்கு நொடி: சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இன்றைய தினம், தரையிறங்குவதற்கான கட்டளையை பெங்களூருவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பித்த நிலையில், 8 கட்டங்களாக நிலவில் மென்மையாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்ட துவங்கினர்.

இந்திய நேரம் 6 மணி அளவில், தரையிறக்கம் பணி ஆரம்பமானது.. கிடைமட்டமாக சுற்றும் லேண்டரை செங்குத்தான கோணத்தில் திருப்பி தரையிறக்கும் பணி தொடங்கி, பிறகு, தானியங்கி இறங்கு இயக்கத்தை இயக்கியவுடன் லேண்டர் வாகனம் படிப்படியாக இறங்க ஆரம்பித்தது.. தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது.
வரலாற்று சாதனை: இது இந்தியாவுக்கே வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.. ஒட்டு மொத்த தேசமும் இந்த நிகழ்வை நேரில் கண்டு புல்லரித்து போய்விட்டனர். சந்திரயான் 3-யும் நிலவில் தரையிறங்கிய நிலையில், 4வது நாடாக நிலவில் தரையிறங்கிய பெருமை நமக்கு கிடைத்துள்ளது..

அதோடு தென் துருவத்தில் களமிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சிறப்பையும் நம் நாட்டுக்கு கிடைத்துள்ளது.. சர்வதேச சட்டத்தில் மாற்றம் வந்தால், நிலவில் இந்தியாவுக்கும் பங்கு கிடைக்கலாம் என்கிறார்கள்.. நிலவில் சந்திரயான் 3 இறங்கிய தருணத்தை பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்காவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கண்டுகளித்தார். நிலவை நெருங்க நெருங்க, பிரதமரின் பூரிப்பாகவும், மிகுந்த எதிர்பார்ப்பாகவும் மாறிக்கொண்டேயிருந்தது..
சாதனை: தரையிறங்கிய இறுதி நொடியில், பிரதமர் கைகளை உற்சாகமாக தட்டினார். பக்கத்திலேயே ரெடியாக வைத்திருந்த தேசிய கொடியை, டக்கென கையில் எடுத்து, வேக வேகமாக ஆட்டி, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நிலவில் இந்தியா தடம் பிடித்த நிலையில், பிரதமரின் முகத்தில் மிகப்பெரிய சாதனையை சாதித்த பெருமை மிளிர்ந்து கொண்டே இருப்பதை அனைவராலும் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications