7 நாட்களில் முடிவுக்கு வரும் சந்திரயான் 3 ரோவரின் பயணம்! காரணம் இதுதான்.. விளக்கும் விஞ்ஞானிகள்
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ள பிரக்யான் ரோவர், தற்போது தென் துருவ பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும் இந்த ரோவர் இன்னும் 7 நாட்கள் வரைதான் தாக்குப்பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் தற்போது சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதாவது நிலவில் இருக்கும் தனிமங்களை பிரக்யான் ரோவர் உறுதி செய்திருக்கிறது. அதாவது, நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.
அதேபோல இங்கு ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தில்தான் நீர் இருக்கும். ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால்தான் (H2O) நீர் உருவாக முடியும். எனவே ரோவர் ஆக்ஸிஜன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ரோவர் இன்றும் 7 நாட்கள் வரைதான் தாக்குப்பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது, "தற்போது பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கிறது. இந்த பகுதியில் 14 நாட்கள் வரை சூரிய வெளிச்சம் இருக்கும். எனவே பிரக்யான ரோவருக்கு தேவையான சக்தி இதன் மூலம் பெறப்படும். ஆனால், 14 நாட்களுக்கு பின்னர் இரவு தொடங்கிவிடும். இரவு எனில் சூரிய வெளிச்சம் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல.. மாறாக இரவு நேரத்தில் இங்கு வெப்பநிலை மைனஸ் 238 டிகிரி வரை குளிர் இருக்கும்.
இந்த குளிரில் பிரக்யான் ரோவரில் உள்ள கருவிகள் வேலை செய்யாது. சில கருவிகள் செயலிழந்து போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரவு 28 நாட்கள் வரை நீடிக்கும் என்பதால் இதிலிருந்து பிரக்யான் ரோவர் மீண்டு வருவதற்கான வாய்ப்பு என்பது மிக குறைவுதான். இருப்பினும் 28 நாட்கள் தொடர் இரவுகளை கடந்து மீண்டும் பிரக்யான் ரோவர் செயல்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications