முன்னே இருந்த பள்ளம்.. அலர்ட் ஆன ரோவர்.. புதிய பாதையில் பயணம்.. இஸ்ரோ தகவல்
பெங்களூர்: நிலவில் ஆய்வு பணியை மேற்கொண்டு வரும் ரோவர் தனக்கு முன்னால் உள்ள பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ என்று சொல்லப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்வெளித்துறையில் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. சந்திரயான்1 மற்றும் சந்திரயான் 2 விண்கலனை அனுப்பி நிலவு குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

40 நாட்கள் பயணம் மேற்கொண்ட இந்த சந்திரயான் விண்கலம் கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் கருவி வெளியே வந்தது. இந்த ரோவர் கருவி தற்போது நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களை கண்காணித்து வருகின்றனர்.

நேற்று நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது. இந்த நிலையில், ரோவர் தனக்கு முன்னாள் உள்ள பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றியது. ரோவரால் 5 மீட்டர் தொலைவில் உள்ளவற்றை உணர முடியும் என்ற நிலையில் 3 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தை உணர்ந்தது. மேடான பகுதியை கடக்கக் கூடிய வகையில் ரோவரில் தொழில் நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று 4 மீட்டர் பள்ளம் தனது பாதையில் இருந்ததால் பாதையை மாற்றிய சந்திரயான் ரோவர் தற்போது புதிய பாதையில் பாதுகாப்பாக பயணிப்பதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேண்டரில் இருந்து ரோவர் 500 மீட்டர் பயணிக்க முடியும் என்ற நிலையில் 8-10 மீட்டர் தொலைவில் உள்ளது.












Click it and Unblock the Notifications