சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம்.. இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்க லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கில், இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
சுமார் 4 ஆண்டுகள் அங்குச் சிறையிலிருந்த சசிகலா, கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

லஞ்சம்
அதன் பின்னர் அதிரடி அரசியலில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா அமைதியாகவே இருந்து வருகிறார். இதனிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சமயத்தில், சசிகலாவுக்குச் சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்குச் சிறை சில அதிகாரிகள் ரூ 2 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

வழக்கு
இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்ட கமிட்டியின், சிறையில் சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை தான் என அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்திருந்தார்.

அனுமதி
இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வு முன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சசிகலாவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ், தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கர்நாடக அரசு அனுமதி வழங்கியது.

இறுதி குற்றப்பத்திரிக்கை
இந்தச் சூழலில் கீதா தாக்கல் செய்த வழக்கு புதன்கிழமை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தன. இதையடுத்து, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications