இப்படியா ஏமாத்துவாங்க! விமான பயணிகளே உஷார்! பெங்களூரில் சிக்கிய சென்னை நபர்-கிரிமினல் வேலையை பாருங்க
பெங்களூர்: பெங்களூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை குறிவைத்து நூதன முறையில் பணம் கேட்டு மோசடி செய்த சென்னையை சேர்ந்த ‛டிப்டாப்' இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் அவர் பெங்களூர் மட்டுமின்றி சென்னை, ஹைதராபாத் உள்பட பிற தென்மாநில விமான நிலையங்களிலும் இத்தகைய மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் விமான பயணிகள் உஷாராக இருக்க வேண்டும்.
பெங்களூரில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் கடந்த 13ம் தேதி மாலையில் விமான நிலையத்தில் சந்தேகப்படும் படியாக ஒருவர் சுற்றி வந்தார்.

அதாவது விமான நிலையத்தில் ஒவ்வொரு பயணிகளிடமும் பேசியபடி அவர் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அவர் நூதன முறையில் விமான நிலைய பயணிகளிடம் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமான டிக்கெட் எடுத்து வைத்திருந்த நிலையில் தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி அங்கு வரும் பயணிகளிடம் பணம் பெற்றது தெரியவந்தது.
இப்படியாக அவர் சில ஆயிரங்களை பயணிகளிடம் இருந்து பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விக்னேஷ் இந்த பாணியில் தொடர்ந்து பயணிகளை ஏமாற்றி பணம் பெற்று வந்தது தெரியவந்தது. பெங்களூர் மட்டுமின்றி சென்னை, ஹைதராபாத், மும்பை உள்பட இந்தியாவில் பல விமான நிலையங்களில் அவர் இப்படியாக பயணிகளை ஏமாற்றி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கைதான விக்னேஷிடம் இருந்து ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் என மொத்தம் 26 எண்ணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் தனது உடைமைகள் தொலைந்துவிட்டதாகவும், வேலைக்கான நேர்க்காணலுக்கு செல்ல காசு இல்லை எனக்கூறி ரூ.8 ஆயிரம் வரை பயணிகளிடம் ஒருவர் பறித்தார். இதிலும் விக்னேஷ் தான் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற மோசடி பெங்களூர் உள்பட பல விமான நிலையங்களில் அடிக்கடி நடப்பதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் விக்னேஷ் சிக்கியுள்ளார்.மேலும் இந்த மோசடியில் விக்னேஷுக்கு மட்டும் தொடர்பு உள்ளதா இல்லாவிட்டால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறதா என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் விக்னேஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













Click it and Unblock the Notifications