தெருநாய்களுக்கு இனி சுடச்சுட "சிக்கன் ரைஸ்".. 150 கி சிக்கன் கட்டாயம்.. பெங்களூரில் அமலாகும் திட்டம்
பெங்களூர்: பெங்களூரில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு சுடச்சுட ‛சிக்கன் ரைஸ்' வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூ.2.80 கோடி மதிப்பிட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டர் விடப்பட உள்ள நிலையில் விவாதத்ததை கிளப்பி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் பெங்களூர் மாநகராட்சி சார்பில் தெருநாய்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தினமும் தெருநாய்களுக்கு ‛சிக்கன் ரைஸ்' வழங்குவதற்கான திட்டத்துக்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. தெருநாய்களுக்கு தினமும் 750 கலோரி கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி தினமும் தெருநாய்களுக்கு 367 கிராம் சிக்கன் ரைஸ் வழங்கப்பட உள்ளது. இந்த சிக்கன் ரைசில் நாய்களுக்கு கார்ப்போஹைட்ரேட்டுகள் கிடைக்கும் வகையில் 100 கிராம் சாப்பாடு இருக்க வேண்டும். புரோட்டினுக்காக 150 கிராம் சிக்கன் இருக்க வேண்டும். கொழுப்பு சத்துக்காக 10 கிராம் எண்ணெய், வைட்டமின்களுக்காக 100 கிராம் காய்கறிகள், 5 கிராம் உப்பு, 2.5 கிராம் மஞ்சள்தூள் சேர்க்கப்பட வேண்டும்.
பெங்களூரில் மொத்தம் 8 மண்டலங்கள் உள்ளன. முதற்கட்டமாக ஒவ்வொரு மண்டலங்களிலும் தினமும் 600 முதல் 700 நாய்களுக்கு சிக்கன் ரைஸ் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி 125 இடங்களில் மொத்தம் 5,000 தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ் வழங்கப்பட உள்ளது. அதன்படி ஒரு நாய்க்கு 22.42 பைசா செலவில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களை டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
டெண்டர் எடுக்கும் நிறுவனம் மேற்கூறிய விதிகளை பின்பற்றி 125 இடங்களில் தினமும் தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ் வழங்க வேண்டும். பெங்களூரை எடுத்து கொண்டால் நகர் முழுவதும் மொத்தம் 2.80 லட்சம் தெருநாய்கள் சுற்றி வருகின்றன. ஆனால் இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 5 ஆயிரம் தெருநாய்களுக்கு மட்டுமே பலன் கிடைக்க உள்ளது.
இந்த திட்டத்தை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். தெருநாய்களை காக்க மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதேவேளையில் அனைத்து தெருநாய்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதேவேளையில் இன்னொரு தரப்பினரோ எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகா அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழலில் இந்த திட்டம் தேவையில்லாதது. இது அரசு மற்றும் பெங்களூர் மாநகராட்சியை நிதி நெருக்கடியை இன்னும் அதிகப்படுத்தும் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications